காங்கிரசுக்கு பாஜக யோகேஷ்வர் ஜம்ப்! 'ஒக்கலிகா' ஜாதி ஓட்டுக்காக மோதும் குமாரசாமி, டிகே சிவகுமார்!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சென்னபட்டணா சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.சி யோகேஷ்வர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார். சென்னபட்டணா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக யோகேஷ்வர் நிறுத்தப்படுகிறார். இதனால் சென்னபட்டணா தொகுதி இடைத் தேர்தல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது.
கடந்த 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சென்னபட்டணா தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாஜகவை சேர்ந்த சிபி யோகேஷ்வரை 15,915 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தோற்கடித்தார். 2018-ம் ஆண்டு தேர்தலிலும் யோகேஷ்வரை குமாரசாமி இத்தொகுதியில் தோற்கடித்தார். ஆனால் 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட யோகேஷ்வர், குமாரசாமி மனைவி அனிதாவை 6,464 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அப்போது இத்தொகுதியில் பாஜக 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தது.

லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்ற குமாரசாமி, சென்னபட்டணா தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சென்னபட்டணா தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13-ந் தேதி நடைபெறுகிறது.
டிகே சிவகுமார் தீவிர முயற்சி: சென்னபட்டணா தொகுதியை குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியிடம் இருந்து எப்படியாவது காங்கிரஸ் கைப்பற்றியாக வேண்டும் என்பதில் துணை முதல்வர் டிகே சிவகுமார் மிக தீவிரமாக இருந்து வருகிறார். இதனால் டிகே சிவகுமார், தாமே இத்தொகுதியில் போட்டியிடுவேன் என அறிவித்திருந்தார். பின்னர் அவரது சகோதரரான டிகே சுரேஷ் போட்டியிடக் கூடும் எனவும் எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் சென்னபட்டணா தொகுதியை பாஜக, ஜேடிஎஸ் கட்சிக்கு தற்போது ஒதுக்கிவிட்டது.
குமாரசாமி vs டிகே சிவகுமார்: இதனையடுத்து சென்னபட்டணா தொகுதி இடைத்தேர்தலானது குமாரசாமி Vs டிகே சிவகுமார் என்கிற மோதலாக மையம் கொண்டது. பாஜகவிடம் இருந்து சென்னபட்டணா தொகுதியை குமாரசாமி போராடிப் பெற்றுக் கொண்டாலும் குடைச்சலாக இருந்தவர் சிபி யோகேஷ்வர். சென்னப்பட்டணாவை ஜேடிஎஸ்-க்கு தரக் கூடாது; தமக்கே சென்னபட்டணாவில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என பாஜக மேலிடத்தை தொடர்ந்து மிரட்டி வந்தார் யோகேஷ்வர். ஆனால் அவரது மிரட்டலை பற்றி கவலைப்படாமல் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சிக்கு சென்னப்பட்டணா தொகுதியை பாஜக கொடுத்துவிட்டது.
நிராகரிக்கப்பட்ட குமாரசாமி திட்டம்: இதனால் சென்னபட்டணா தொகுதியில் ஜேடிஎஸ் வேட்பாளரை எதிர்த்து யோகேஷ்வர் சுயேட்சையாக போட்டியிடக் கூடும் என முதலில் கூறப்பட்டது. இந்த தகவல்கள் வெளியான நிலையில் உஷாரான குமாரசாமி, ஜேடிஎஸ் கட்சியின் சின்னத்தில் யோகேஷ்வர் போட்டியிடலாம் என்கிற சமாதான யோசனையை முன்வைத்தார். இதனை யோகேஷ்வரும் ஏற்கவில்லை; ஜேடிஎஸ் கட்சி நிர்வாகிகளும் ஏற்கவில்லை; பாஜகவும் ஏற்கவில்லை.
எம்.எல்.சி. பதவி ராஜினாமா: மேலும் யோகேஷ்வர், பாஜக மேலிடத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முதலில் தமது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்தார். யோகேஷ்வரின் எம்.எல்.சி. ராஜினாமாவால் பதறிப் போன பாஜக டெல்லி மேலிடம் உடனடியாக, குமாரசாமியிடம் ஆலோசனை நடத்தியது. ஜேடிஎஸ் சின்னத்தில் யோகேஷ்வர் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? எனவும் பாஜக தலைவர் ஜேபி நட்டா, குமாரசாமியிடம் ஆலோசனை நடத்தி இருந்தார்.
காங்கிரஸில் யோகேஷ்வர்: இந்த பின்னணியில் இன்று திடீரென கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமாரை யோகேஷ்வர் சந்தித்தார். இச்சந்திப்பைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையாவையும் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் யோகேஷ்வர் இணைந்துவிட்டார்.
யோகேஷ்வர், குமாரசாமி மோதல்: தற்போது காங்கிரஸில் இணைந்துவிட்ட யோகேஷ்வர், சென்னப்பட்டணா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளராக யோகேஷ்வர் களமிறங்கும் நிலையில் ஜேடிஎஸ் கட்சி, மத்திய அமைச்சர் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமி அல்லது அவரை விட வலிமையான ஒரு வேட்பாளரைக் களமிறக்கும். சென்னபட்டணா தொகுதியில் ஜேடிஎஸ் கட்சிக்கும் வாக்கு வங்கி இருக்கிறது; யோகேஷ்வருக்கும் தனித்த செல்வாக்கு இருக்கிறது.. இதனால் சென்னப்பட்டணா தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
'ஒக்கலிகா' அக்னி பரீட்சை: கர்நாடகாவின் பெரும்பான்மை ஜாதிகளில் ஒன்றான ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர் யோகேஷ்வர். ஒக்கலிகா ஜாதி வாக்காளர்களிடம் செல்வாக்கு கொண்டவர்; அதேபோல குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியே ஒக்கலிகா ஜாதி வாக்குகளை மட்டுமே நம்பி இருக்கிறது. ஜேடிஎஸ் கட்சியின் ஒக்கலிகா கோட்டையை அசைத்துப் பார்த்து மரண பயம் காட்டியவர் அதே ஜாதியை சேர்ந்த கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான டிகே சிவகுமார். தற்போது சென்னப்பட்டணா தொகுதி தேர்தல் முடிவுகள்தான் ஒக்கலிகா ஜாதியில் யாருக்கு செல்வாக்கு? என்பதை வெளிப்படுத்தக் கூடிய அக்னி பரீட்சையாக இருக்கப் போகிறது. சென்னப்பட்டணா தொகுதியில் குமாரசாமி வென்றாலும் தோற்றாலும் சிக்கல் இல்லை; ஆனால் டிகே சிவகுமார் முன்னிறுத்தும் யோகேஷ்வர் தோல்வியைத் தழுவிவிட்டால் டிகே சிவகுமாருக்கு காங்கிரஸ் கட்சியிலேயே மிகப் பெரிய நெருக்கடி உருவாகிவிடும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications