பாஜக போல காங். அரசு துரோகம்! கர்நாடகாவில் வறட்சி- காவிரி நீர் தர முடியாது- வழக்கம் போல 'பஞ்சபாட்டு'!
பெங்களூர்: கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிறது; தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை காவிரி மேலாண்மை வாரியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப்பட வேண்டிய 57 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டிய 37 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு பிரதிநிதிகள் வலியுறுத்தினர். ஆனால் காவிரி மேலாண்மை ஆணையமோ 10 நாட்களுக்கு 10,000 கன அடி நீரை மட்டும் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

தற்போது இந்த உத்தரவையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிறது கர்நாடகா. இது தொடர்பாக கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறுகையில், கர்நாடகாவில் கடுமையான வறட்சி பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டுக்காக காவிரி நீரை திறந்துவிட்டோம். ஆனால் காவிரி நீரை தொடர்ந்து திறந்துவிட முடியாது. காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடவே கூடாது என கர்நாடகா பாஜக வலியுறுத்தி வருகிறது. கர்நாடகா பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை, காவிரி மேலாண்மை ஆணையத்தில் போதுமான ஆதாரங்களுடன் கர்நாடகா அரசு வாதாடவில்லை எனவும் விமர்சித்திருந்தார்.

முன்னதாக டிகே சிவகுமார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்துக்கு போக தேவை இல்லை. தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டோம் என கூறியிருந்தார்.
ஆனால் தற்போது பாஜகவைப் போல கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசும் காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்து பஞ்ச பாட்டு பாடத் தொடங்கி இருப்பது தமிழ்நாட்டு விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications