"இதை செய்யும்" வரை திருமணம் வேண்டாம்.. முதல்வருக்கு கடிதம் எழுதிய பெண்!.. ஆக்ஷனில் குதித்த அரசு!
பெங்களூர்: சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு பெண் ஒருவர் கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவனாகிரி மாவட்டம் எச் ஹம்புராவை சேர்ந்தவர் ஆர்.டி. பிந்து. இவர் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில் எனது கிராமம் தவனகிரியில் இருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இங்கிருந்து நகருக்குச் செல்ல சரியான சாலை, பேருந்து வசதி இல்லை. எங்கள் கிராமத்தில் இருப்பவர்கள் மருத்துவமனை, பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாயகொண்டா கிராமத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.
அமரீந்தர்சிங் ராஜினாமாவை தொடர்ந்து பஞ்சாப் புதிய முதல்வராகிறாரா மூத்த காங். தலைவர் அம்பிகா சோனி?
ஒரே பட்டதாரி பெண்
எங்கள் ஊரில் படித்த ஒரே பட்டதாரி நான் மட்டும்தான். பேருந்து வசதி இல்லாததால் கல்லூரி விடுதியில் தங்கி படித்தேன். எங்கள் ஊருக்கு சாலை வசதி, போக்குவரத்து வசதியை செய்து தரும் வரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நானும் திருமணம் செய்து கொண்டு மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றுவிட்டால், எனது கிராமத்திற்காக பேச யாரும் இல்லை.
5 ஆம் வகுப்பு வரை
இதனால்தான் இந்த முடிவை நான் எடுத்தேன் என்றார். இவரது கடிதம் முதல்வருக்கு ஈமெயில் மூலம் சென்றது. இந்த கிராமத்தில் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. மேற்கொண்டு படிக்க 14 கி.மீ. தூரம் தினந்தோறும் சென்றுவர வேண்டியிருக்கிறது. இந்த பிரச்சினையால் நிறைய பெண்கள் படிப்பை 5 ஆம் வகுப்பு வரை நிறுத்திக் கொண்டதாகவும் பிந்து தெரிவித்தார்.
தேவனாகிரி மாவட்டம்
இதையடுத்து இந்த கிராமத்தை தேவனாகிரி மாவட்ட துணை ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த கிராமத்தின் மோசமான சாலையால் அவர் கிட்டதட்ட 2 கி.மீ. தூரம் நடந்தே சென்றார். இதையடுத்து சாலை வசதியை ஏற்படுத்தித் தர உள்ளூர் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா சுதந்திரம்
இங்கு சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும் என இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதல் கோரிக்கை விடுத்து வருவதாக ஊர் பெரியவர்கள் கூறினர். இந்த பெரியவர்களின் மன வருத்தமே தன்னை முதல்வருக்கு கடிதம் எழுத வைத்தது என்றும் பிந்து தெரிவித்துள்ளார். இவரது கிராம சாலை மழைகாலத்தில் நாற்று நடும் அளவுக்கு காட்சி அளிக்கிறது. இதில் இரு சக்கர வாகனம், சைக்கிளில் சென்றவர்கள் விழுந்து எழுந்து காயமடைந்ததாகவும் தெரிவிக்கிறார்கள்.