எம்ஜிஆர் அலையில் நீந்தி ஜெயித்து.. கூவத்தூரில் சுவர் ஏறி குதித்து! அதிமுகவின் செல்லப்பிள்ளை செம்மலை!
சென்னை: அதிமுகவில் மீண்டும் வெடித்துள்ள உட்கட்சி மோதலுக்கு நடுவில், முன்னாள் அமைச்சர் செம்மலை கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நீண்ட காலமாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக பார்க்கப்பட்ட செம்மலை தற்போது எடுத்துள்ள இந்த முடிவு, அதிமுகவில் நிலவும் குழப்பத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் அலையை மீறி சுயேட்சையாக வென்ற செம்மலை, ஜெ. மறைவுக்கு பின் ஓபிஎஸ்,எடப்பாடி என மாறி மாறி அணிகளிலிருந்தாலும், அவருக்கு பதவி கிடைக்காத நிலையில் தான் கட்சியில் இருந்து விலகியிருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
சேலம் மாவட்ட அரசியலில் தனித்த அடையாளம் கொண்டவர் செம்மலை. 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அப்போது எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அலை தமிழகமெங்கும் வீசிய நிலையில் கூட, சேலம் மாவட்டத்தின் தாரமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

அதுவும் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஆர். நாராயணனை 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது அப்போது தமிழக அரசியலில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. 1977 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செம்மலை, வெறும் 19 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தார்.
செம்மலை
அதன் பின்னர் 1980 தேர்தலில் தாரமங்கலம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், உள்ளூர் நிர்வாகிகள் வற்புறுத்தலின் பேரில் சுயேச்சையாக களமிறங்கினார். அப்போது எம்.ஜி.ஆருக்கான அனுதாப அலை உச்சத்தில் இருந்தாலும், அதை மீறி வெற்றி பெற்றதால் "எம்.ஜி.ஆர் அலையையே தாண்டி ஜெயித்தவர்" என்ற பெருமை செம்மலைக்கு கிடைத்தது. அந்த வெற்றிக்குப் பிறகு எம்.ஜி.ஆரே அவரை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். பின்னர் 1984 தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா
தொடர்ந்து ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராகவும், சேலம் மக்களவைத் தொகுதி எம்.பியாகவும், அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக்காலத்திலும் முக்கிய நிர்வாகியாக செயல்பட்ட செம்மலை, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் பரபரப்பின்போதும் முக்கிய பங்காற்றியவர். ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த பிறகு, சசிகலா தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் அதிகாரப் போட்டியில் ஈடுபட்ட சூழலில், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் மிகப்பெரிய விவாதமாக மாறியது.
கூவத்தூர் விடுதி
அப்போது பல எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. "எடப்பாடியை முதல்வராக ஏற்க முடியாது" என சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அந்த சூழலில் செம்மலை கூட கூவத்தூர் விடுதியில் இருந்து சுவர் ஏறி வெளியேற முயன்றார் என்றும் அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டது. பின்னர் அவர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்து செயல்பட்டார்.
எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி தரப்புக்கும் இடையே கடும் மோதல் உருவாகியுள்ளது. சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து கட்சிக்குள் பிளவு வெளிப்படையாகியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், நீண்ட கால அனுபவம் கொண்ட மூத்த தலைவர் செம்மலை கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
செம்மலை விலகல்
அவர் எந்த அணியை ஆதரிக்கப் போகிறார்? புதிய அரசியல் நிலைப்பாடு எடுக்கிறாரா? அல்லது அரசியலிலிருந்தே ஒதுங்கப் போகிறாரா? என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து கட்சியுடன் இருந்த ஒரு மூத்த தலைவர் விலகியிருப்பது, அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இரு அணிகளாக பிரிந்து பரபரப்பில் இருக்கும் அதிமுகவில், செம்மலையின் விலகல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications