அருந்ததி படம் மாதிரியே.. தீக்குளித்த இளைஞர்! அனுஷ்கா போல் மறுபிறவி எடுப்பதாக கூறி பலி!
பெங்களூர்: அருந்ததி படத்தில் வரும் நடிகை அனுஷ்கா போன்று மறுபிறவி எடுப்பதாக கூறி தீக்குளித்த இளைஞர் உடல் கருகி பரிதாபமாக இறந்த சோகமான சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது.
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாகும். இரண்டரை மணிநேரம் முதல் மூன்று மணி நேர பொழுதுபோக்காக தான் பிடித்த திரைப்படத்தை பார்த்து ரசிக்க வேண்டும். முடிந்தால் சினிமாவில் காட்டும் நல்ல விஷயங்களை வாழ்க்கையில் பின்பற்ற கற்று கொள்ள வேண்டும்.
மாறாக சினிமாவில் வரும் காட்சிகளின் தாக்கத்தை மூளைக்கு கொண்டு சென்று முயற்சித்து பார்க்கக்கூடாது. இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் கர்நாடகத்தில் ஒருவர் சினிமாவை பார்த்து அதில் வரும் காட்சி போன்று முயற்சிப்பதாக கூறி உயிரை விட்டுள்ளார். இந்த சோக சம்பவம் குறித்த விபரம் வருமாறு:
தேனி அருகே குப்பை கொட்டும் விவகாரம் ஜாதி மோதலாக வெடித்தது- உரல் கல்லால் தாக்கியதில் ஒருவர் பலி!
சினிமா ஆர்வம் கொண்ட இளைஞர்
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் மதுகிரி தாலுகா கொண்டவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரேணுக பிரசாத் (வயது 22). இவர் சினிமா பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். திரையரங்குக்கு சென்று புதிய படங்களை பார்க்கும் வழக்கம் கொண்டிருந்த ரேணுக பிரசாத், தொலைக்காட்சியிலும் பழைய படங்களை பார்த்து வந்துள்ளார்.
தீ வைத்து கொண்ட இளைஞர்
இந்நிலையில் தான் ரேணுக பிரசாத் சாலையோரம் நின்று திடீரென்று உடலில் பெட்ரோல் ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டார். தீ வேகமாக உடலில் பற்றி எரிந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். மேலும் தரையில் படுத்து உருண்டு தீயை அணைக்க முயன்றார். இதுவும் கைக்கூடவில்லை.
மருத்துவமனையில் அனுமதி
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வேகமாக வந்து அவரது உடலில் பிடித்த தீயை அணைத்து துமகூரு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அருந்ததி படம் பார்த்த பிறகு..
இந்நிலையில் தான் ரேணுக பிரசாத் தனது உடலில் பெட்ரோல் வைத்து தீ வைத்து கொண்டது ஏன்? என்பது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரேணுக பிரசாத் அதிகளவில் சினிமா திரைப்படம் பார்க்கும் பழக்கம் கொண்டுள்ளார். நடிகை அனுஷ்கா, நடிகர் சோனுசூட் நடிப்பில் 2009ல் வெளியான அருந்ததி படத்தை அவர் சமீபத்தில் பார்த்துள்ளார்.
காரணம் இதுதானாம்
இந்த படத்தில் வில்லனான சோனுசூட்டை கொல்வதற்கான எலும்பு ஆயுதத்துக்காக மரண வேதனையை அனுபவித்து அனுஷ்கா தன்உயிரை துறப்பார். மீண்டும் அவர் 3வது ஜென்மத்தில் உயிர் பிழைத்து சோனுசூட்டை எலும்பால் ஆன ஆயுதம் கொண்டு வீழ்த்துவார். இந்த திரைப்படம் அவரை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் ரேணுக பிரசாத் தானும் அனுஷ்கா மாதிரி இறந்து மீண்டும் பிறந்து வருவேன் என கூறி வந்த நிலையில் தான் உடலில் தீ வைத்து எதிர்பாராத விதமாக இறந்தது தெரியவந்துள்ளது.
தொடர் விசாரணை
அருந்ததி படத்தில் வந்த காட்சியை பார்த்து மறுஜென்மம் எடுப்பதாக கூறி இளைஞர் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.