6-வது மாடியில் இருந்து குதித்து சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை.. காதல் தோல்வி காரணமா? போலீஸ் விசாரணை
பெங்களூரு: கல்லூரி கட்டிடத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வி காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் வாணி. வயது 23.
வாணி பெங்களூருவில் உள்ள விஸ்வெஷ்வரபுரா கல்லூரியில் சட்டம் பயின்று வருகிறார். சட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு வாணி படித்து வந்தார்.

கல்லூரிக்கு வரவில்லை
கல்லூரி தொடங்கி 2 மாதங்களே ஆகியுள்ள நிலையில், தினமும் தவறாமல் கல்லூரிக்கு சென்று வந்து படிப்பில் கவனம் செலுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், திடீரென்று நேற்று அவர் கல்லூரிக்கு செல்லவில்லையாம். தினமும் கல்லூரிக்கு தவறாமல் வரும் வாணி இன்று வரவில்லை என்பதால், தேடிய உடன் படித்த மாணவிகள்.. உடல் நிலை சரியில்லாமல் இருக்கலாம் என்று கருதியதாக தெரிகிறது.

6-வது மாடியில் இருந்து குதித்தார்
இந்த நிலையில், தான் படித்து வரும் கல்லூரிக்கு அருகே உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழக கட்டிடத்தின் 6-வது மாடிக்கு வாணி சென்றுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் 6 வது மாடியில் இருந்து வாணி குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் பதறியடித்தபடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த வி வி புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மாணவியின் தற்கொலை கடிதம்
மாணவி வாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையின் மாணவி கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் ஒன்றும் சிக்கியது. அந்தக் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி கடந்த சில நாட்களாகவே மனம் உடைந்து விரக்தியில் இருந்து வந்ததாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் போலீசில் சொல்லியிருக்கின்றனர்.

தற்கொலை தீர்வல்ல..
இருந்தாலும் காதல் தோல்வியா? குடும்ப பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல என்பதை இன்றைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும். சின்ன சின்ன விஷயங்களுக்காகக் கூட சண்டை போட்டுக்கொண்டு தற்கொலை எனும் விபரீத முடிவை எடுக்கும் மோசமான போக்கு இன்றைய சமூகத்தினர் மத்தியில் அதிகம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மனம் விட்டு பேசி
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது போதிய அக்கறை செலுத்தி அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டால் மனம் விட்டு பேசி பிரச்சினையை புரிய வைத்து அதில் இருந்து மீள ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் கூறும் சமூக ஆர்வலர்கள் எந்த ஒரு பிரச்சினையை துணிந்து எதிர்கொள்ள வேண்டுமே தவிர தற்கொலைகளால் வாழ்க்கை முடித்துக்கொள்ளக் கூடாது என்கின்றனர்.












Click it and Unblock the Notifications