"அதே 32 பீஸ்!" இந்த முறை கர்நாடகாவில்.. 20 வயது இளைஞர் வெறிச்செயல்! வெலவெலத்து போன போலீஸ்
பெங்களூர்: டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் கொடூரமாக வெட்டி கொலை செய்தான். இதற்கிடையே அதேபோன்ற ஒரு சம்பவம் கர்நாடகாவிலும் நடந்துள்ளது.
இந்தியாவில் சமீப காலத்தில் நடந்த மிக மோசமான கொலையாக ஷ்ரத்தா வாக்கர் கொலையைச் சொல்லலாம். 27 வயது பெண்ணான ஷ்ரத்தா வாக்கரை அவரது காதலனே கொடூரமாகக் கொலை செய்தான்.
அத்துடன் நிற்காமல் ஷ்ரத்தாவின் உடலை 35 பீஸாக வெட்டியுள்ளான். அதை அப்படியே தனது வீட்டில் பிரிட்ஜில் வைத்த அந்த இளைஞன், கொஞ்சம் கொஞ்சமாக அதை டெல்லியில் பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளான்

கர்நாடகா
இந்தச் சம்பவம் நாடு முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே ஷ்ரத்தா வாக்கர் எப்படி கொலை செய்யப்பட்டாரோ, அதேபோல ஒரு குற்றச் சம்பவம் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடகாவின் பாகல்கோட்டில் ஒரு நபர் தனது தந்தையைக் கொன்று, அவரது உடலை 32 துண்டுகளாக வெட்டியுள்ளான். பின்னர், அதை அங்குத் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் வீசியுள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது
இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்மந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். இருந்த போதிலும், கொல்லப்பட்ட அந்த நபரின் உடலைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து மணல் அள்ளும் வாகனத்தை வரவழைத்து, அதன் மூலம் கொல்லப்பட்ட நபரின் உடல் உறுப்புகளை போலீசார் மீட்டனர். அதேபோல குற்றம் சாட்டப்பட்ட வித்தலா குலாலி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

என்ன நடந்தது
இந்தச் சம்பவம் கடந்த டிசம்பர் 6ஆம் தேதியே நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் பரசுராம் குலாலி. 53 வயதான இவருக்குத் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இருப்பினும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். மூத்த மகன் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இளைய மகனான வித்தலா குலாலி, பரசுராமுடன் தங்கி வந்துள்ளார் என்று அம்மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

மகனுக்கு தொல்லை
தந்தையுடன் இருந்தாலும் கூட வித்தலா குலாலியால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் தந்தை பரசுராம் மது குடித்துவிட்டு வந்து தனது வித்தலாவை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார்.தந்தை என்பதால் அத்தனையும் பொறுத்துக் கொண்டிருந்துள்ளார் வித்தலா குலாலி. இருப்பினும், கடந்த டிச.6ஆம் தேதி எல்லை மீறி தொல்லை கொடுத்துள்ளார். வித்தாலவை மிகக் கடுமையாக அடித்தும் துன்புறுத்தியுள்ளார்.

கொலை
பொறுத்துப் பொறுத்து பார்த்த வித்தலா, அன்றைய தினம் பொறுமை இழந்துவிட்டார். தனது தந்தையின் தொல்லையைத் தாங்க முடியாமல் அருகே இருந்த இரும்பு ராடை எடுத்து தந்தையின் தலையிலேயே மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் பரசுராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தை கொன்ற பிறகு வித்தலாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எப்படியோ தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டு தந்தையின் உடலை பாகங்களாக வெட்டத் தொடங்கியுள்ளார்.

32 பீஸாக வெட்டி
தந்தையின் உடலை சொந்த மகனே மொத்தம் 32 பீஸ்களாக வெட்டியுள்ளான். அதைத் தொடர்ந்த தந்தையின் உடல் பாகங்களை ஒரு பேக்கில் போட்டுள்ளான். பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள முதோல் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள மாண்டூர் பைபாஸ் அருகே அவர்களுக்குச் சொந்தமாக ஒரு நிலம் உள்ளது. அங்குத் திறந்த வெளியில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் வீசியுள்ளார். இந்த உடல் பாகங்களைத் தான் போலீசார் இப்போது மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வித்தலாவை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். டெல்லியிலும் ஷ்ரத்தா படுகொலையைப் பார்த்து இதுபோல உடல் உறுப்புகளை பீஸ் பீஸாக வெட்டினாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications