பலே காங்கிரஸ்.. லோக்சபா தேர்தலில் பெங்களூரில் நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி போட்டி? தொகுதி இதுதான்
பெங்களூர்: மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மருமகளும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ் குமாரை பெங்களூர் வடக்கு நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகர் ராஜ்குமார். இவரது மகன் சிவராஜ்குமார். இவரது மனைவி பெயர் கீதா சிவராஜ்குமார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகள் ஆவார். நடிகர் ராஜ்குமாரின் குடும்பம் அரசியலில் இருந்து விலகி உள்ளது.

இருப்பினும் கீதா சிவராஜ்குமார் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் முதலில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு சகோதரர் மதுபங்காரப்பாவுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
கீதா சிவராஜ்குமாரின் சகோதரர்கள் 2 பேரும் அரசியலில் உள்ளனர். அதாவது கீதா சிவராஜ்குமாரின் சகோதரர்களான குமார் பங்காரப்பா பாஜகவில் உள்ளார். மதுபங்காரப்பா ஜேடிஎஸ்ஸில் இருந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக உள்ளார். இவர் கடந்த தேர்தலில் சிவமொக்கா மாவட்டம் சொரபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தனது சகோதரரான பாஜக வேட்பாளர் குமார் பங்காரப்பாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். கீதா சிவராஜ்குமார் தனது கணவர் சிவராஜ்குமாருடன் சேர்ந்து மதுபங்காரப்பாவுக்கு ஆதரவாக சட்டசபை தேர்தலில் ஓட்டு சேகரித்தார்.
எம்பி சீட்டை மேடையில் உதறிய நடிகர் சிவராஜ் குமார்! டிகே சிவக்குமார் கூறியும் கேட்கலையே! காங்., ஷாக்
இந்நிலையில் தான் பெங்களூர் வடக்கு நாடாளுமன்ற தொகுதியில் நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமாருக்கு போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தொகுதியில் தற்போது முன்னாள் மத்திய அமைச்சரும், மாஜி முதல்வருமான பாஜகவின் சதானந்தகவுடா எம்பியாக உள்ளார். இவர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் இந்த தொகுதியில் பாஜக புதிய முகத்தை வேட்பாளராக அறிவிக்க உள்ளது.
இத்தகைய சூழலில் தான் பெங்களூர் வடக்கு தொகுதியை கைப்பற்ற காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது. அந்த வகையில் பெங்களூர் வடக்கு தொகுதியில் கீதா சிவராஜ்குமாரை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியில் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதிகம் உள்ளனர். தற்பாதைய காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். அதோடு பெங்களூர் வடக்கு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பேடராயனபுரா சட்டசபை தொகுதிகளில் ஏராளமான சினிமா பிரபலங்கள் உள்ளன. இவர்கள் சிவராஜ்குமாருடன் நெருக்கம் காண்பிக்கின்றனர். இதனை சரியாக பயன்படுத்தினால் கீதா சிவராஜ்குமாரை வெற்றி பெற வைக்கலாம் என காங்கிரஸ் கட்சி நினைத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பெங்களூர் வடக்கு நாடாளுமன்ற தொகுதி என்பது பாஜகவின் கோட்டையாகும். ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த இந்த தொகுதி கடந்த 2004ம் ஆண்டில் இருந்து பாஜகவின் வசம் உள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் சதானந்தகவுடாவை எதிர்த்து தற்போதைய அமைச்சரான கிருஷ்ணபைரேகவுடா போட்டியிட்டு தோல்வியடைந்தார். இத்தகைய சூழலில் தான் இந்த முறை எப்படியாவது பெங்களூர் வடக்கு தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றும் முனைப்பில் உள்ள நிலையில் கீதா சிவராஜ்குமாரை அங்கு வேட்பாளராக நிறுத்துவதில் உறுதியாக உள்ளதாம்.
முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் அரண்மனை மைதானத்தில் கர்நாடகா மாநில ஆர்ய இடிகா சங்க விழா நடந்தது. இதில் துணை முதல்வரும், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமார், நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்றனர். அப்போது நடிகர் சிவராஜ்குமாருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக டிகே சிவக்குமார் அறிவித்தார். ஆனால் சிவராஜ்குமார் அதனை ஏற்க மறுத்தார். அதோடு தனது மனைவி கீதாவுக்கு வாய்ப்பு வழங்கினால் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக தெரிவித்து இருந்தார். இத்தகைய சூழலில் தான் பெங்களூர் வடக்கு நாடாளுமன்ற தொகுதியை குறிவைத்து காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications