கர்நாடகத்தில் சிறுவனின் உயிரை பறித்த ‛லுடோ’ கேம்! இளைஞர் செய்த கொடூர கொலை! நடந்தது என்ன?
பெங்களூர்: கர்நாடகம் மாநிலம் கலபுரகி அருகே செல்போன் ‛லுடோ' விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் 16 வயது சிறுவனை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவ துவங்கியதை தொடர்ந்து ஆன்லைனில் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இதனால் பள்ளி பயிலும் மாணவர்களும் அதிகளவில் செல்போன் பயன்படுத்த துவங்கினர்.
இந்நிலையில் தற்போது ஏராளமான மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டை விளையாடி வருகின்றனர். பலர் செல்போன் விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளனர்.

செல்போன் விளையாட்டால் குற்றம்
இந்த விளையாட்டின் காரணமாக கொலை, பெற்றோரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுதல் போன்ற குற்றங்களை சிறுவர்கள் செய்து வாழ்க்கையை பாழாக்கி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கூட உத்தர பிரதேச மாநிலத்தில் ராணுவவீரரின் மகன் ஒருவர் பப்ஜி விளையாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனது தாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் தற்போது கர்நாடக மாநிலத்தில் ‛லுடோ' விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:

‛லுடோ’ விளையாட்டு
கலபுரகி மாவட்டம் அப்சல்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாஸ்யால் கிராமத்தில் வசித்தவர் சாமராய பரீட் (வயது 16). அதே பகுதியில் வசிப்பவர் சச்சின் கிரசாவலகி (22). இவர்கள் 2 பேரும் தினமும் செல்போனில் 'லுடோ' ஆன்லைன் பகடை விளையாட்டு விளையாடுவதை வாடிக்கையாக வைத்து இருந்தனர்.

கத்திக்குத்து
நேற்று முன்தினம் இரவு இருவரும் லுடோ விளையாடினர். அப்போது வெற்றி பெறுவது தொடர்பாக திடீரென்று 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. இதையடுத்து அங்கு வந்த சாமராயாவின் சகோதரர் இருவரையும் அங்கிருந்து அனுப்பினார். அதன்பிறகும் அவர்கள் இடையேயான பிரச்சனை நிற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சச்சின் தனது வீட்டில் இருந்து கத்தியை எடுத்து சாமராய பரீட்டை சரமாரியாக குத்தினார்.

சிறுவன் இறப்பு; இளைஞர் கைது
இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அப்சல்புரா போலீசார் அப்சல்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சினை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. செல்போன் ‛லுடோ' விளையாட்டில் இளைஞர் ஒருவர் சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கர்நாடகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications