15 வயது பேத்தியின் திருமணத்தை எதிர்த்த முதியவரை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்
பெங்களூரு: பெங்களூரில் மைனர் பேத்தியின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த முதியவரை அவரின் மகனே கொலை செய்துள்ளார்.
பெங்களூர் மாவட்டம் தொட்டபல்லபூர் தாலுகாவில் உள்ள கரினஹள்ளியை சேர்ந்தவர் ஈஸ்வரப்பா(70). அவரின் மகன் குமார் தனது 15 வயது மகளுக்கு சுப்ரமணி என்பவரின் மகனுடன் திருமணம் செய்ய முடிவு செய்தார்.
இது குறித்து குமார் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதற்கு ஈஸ்வரப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிளஸ் 1 படிக்கும் பெண்ணுக்கு எதற்கு திருமணம். மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டாம். 18 வயது ஆகும் வரை காத்திருக்கலாம் என்று ஈஸ்வரப்பா தனது மகனிடம் கூறியுள்ளார்.
இதை கேட்டு குமார் ஆத்திரம் அடைந்தார். இந்நிலையில் சைல்டு ஹெல்ப்லைனுக்கு குமாரின் மகளுக்கு திருமணம் நடக்க உள்ளது பற்றி யாரோ தகவல் தெரிவிக்க உள்ளூர் போலீசார் அவரின் வீட்டிற்கு வந்தனர். திருமணத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. ஈஸ்வரப்பா தான் இது குறித்து தகவல் தெரிவித்திருக்க வேண்டும் என்று குமார், சுப்ரமணி ஆகியோர் அவர் மீது கோபம் அடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு சுப்ரமணி ஈஸ்வரப்பாவின் உடலை பிடிக்க குமார் அவர் தலையில் கல்லைப் போட்டார். இதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரப்பாவை குடும்பத்தார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுப்ரமணியை தேடி வருகின்றனர்.