18 உயிர்களை பலி கொண்ட விபத்து.. கன்னிகைப்பேர் தனியார் நிறுவனத்தில் அமோனியாவை அகற்றும் பணி தொடக்கம்!
சென்னை: தனியார் கடல் உணவு பொருட்கள் பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்டிருந்த அமோனியா வாயு கசிவு, 18 பேரின் உயிரை பறித்திருந்தது. இந்நிலையில், இந்த நிறுவனத்திலிருந்து அமோனியா வாயுவை அப்புறப்படுத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன.
சென்னையை அடுத்துள்ள பெரியப்பாளையும் கன்னிகைப்பேர் பகுதியில்தான் இந்த தனியார் கடல் உணவு பொருட்கள் பதப்படுத்தும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு கடன் உணவுகள் பதப்படுத்தப்பட்டு அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிறுவனத்தில் கடந்த மாதம் 21ம் தேதி காலை வழக்கம்போல பணியாட்கள் வேலைக்கு வந்திருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழ தொடங்கியிருக்கின்றனர். அமோனியா வாயு கசிந்திருப்பது பின்னர்தான் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து பணியாளர்கள் அங்கிருந்து வெளியேற தொடங்கியிருக்கின்றனர். ஆனால், அதற்குள் வாயு கசிவு மொத்த பேரையும் பாதித்திருக்கிறது.

83 பேர் வாயு கசிவால் பாதிக்கப்பட்டனர். இதில் 7 பேர் வரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒவ்வொருவராக உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 18 பேர் உயிரிழந்தனர். முதற்கட்ட விசாரணையில் கடல் உணவுகளை குளிர்விக்க அமோனியா பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த வாயு செல்லும் வால்வு குழாயில் ஏற்பட்ட லீக்தான் உயிரிழப்புக்கு காரணம் என்றும் தெரிய வந்தது.
சம்பவம் தொடர்பாக ஆலையை மூடி சீல் வைத்த அதிகாரிகள் தொடர் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இப்படி இருக்கையில், ஆலையிலிருந்து பத்திரமாக வாயுவை வெளியேற்ற திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து ஆலையில் உள்ள அமோனியாவை பத்திரமாக வெளியேற்றும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்த விபத்தை தொடர்ந்து நிறுவனத்தின் உரிமையாளர் ஜோசப் மோகன், ஜோசப் ஜெகன், மேலாளர் டேனியல், ஒப்பந்ததாரர் சுரேஷ் பிரபாத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications