E 20.. பழைய கார்களில் மைலேஜ் குறைவதை தாண்டி, என்ஜினும் வேகமாக தேய்கிறது.. ஆய்வில் தகவல்
சென்னை: மைலேஜ் பிரச்சனை மற்றும் என்ஜினில் ஏற்படும் பழுதுகள் காரணமாக வாகன ஓட்டிகளிடையே e20 பெட்ரோல் தற்போது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. எத்தனால் கலப்பு எரிபொருளால் ஏற்படும் என்ஜின் பாதிப்புகள் குறித்த புகார்கள் மற்றும் அதற்கு அளிக்கும் பதில்கள் ஆகியவை விரிவாக ஆராயப்பட வேண்டும் என்று E20 எரிபொருளைக் குறை கூறி பலரும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இவர்கள் கூறும் குறைகளை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது என்றும் நிச்சயம் விவாதத்திற்கு உரியதுதான் என்று வாகனங்களை பழுதுபார்ப்பவர்களுமே கூறுகிறார்கள். இதுபற்றி விரிவாக பார்ப்போம்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள E20 எத்தனால் கலப்புத் திட்டம் என்பது ஒரு "தொடரும் பரிசோதனை"தானா என்று நாடு முழுவதும் விவாதத்திற்கு உரியதாக மாறி உள்ளது. நாடு முழுவதும் E20 எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பழைய பெட்ரோல் வாகனங்களின் உரிமையாளர்கள் பலர் மைலேஜ் பெரிய அளவில் சரிந்துவிட்டதாக கூறுவது மறுக்க முடியாத உண்மை. ஆனால் மைலேஜ் பாதிப்பின் அளவு வாகனத்திற்கு வாகனம் மாறுபடுகிறது.

e20 பெட்ரோல் பிரச்சனைகள்
E20-க்கு ஏற்றதாக வடிவமைக்கப்படாத பழைய வாகனங்கள் நீண்ட கால அடிப்படையில் எவ்வாறு செயல்படப் போகின்றன என்பதுதான் இனி பார்க்க வேண்டிய விஷயம் என்கிறார்கள் வாகன ஓட்டுநர்கள். அதேபோல் மைலேஜ் பிரச்சனைகளை தாண்டி, மிகவும் கவலைக்குரிய ஒரு கேள்வி இப்போது முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருக்கிறது. E20 எரிபொருள் பழைய வாகனங்களின் இயந்திர ஆரோக்கியத்தை மெல்ல மெல்லப் பாதிப்பதாக வாகன ஓட்டிகள் பலரும் கூறுகிறார்கள். இது வெறும் குற்றச்சாட்டு மட்டுமல்ல.. 'லோக்கல் சர்க்கிள்ஸ்' நடத்திய புதிய ஆய்வு ஒன்று வாகன ஓட்டுநர்களின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கலாம் என்றே சுட்டிக்காட்டுகிறது.
அரசு மற்றும் தொழில் துறை தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட புதிய பெட்ரோல் வாகனங்களில் சுமார் 20 சதவீதம் மட்டுமே E20 (20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு ஏற்றவை என்று ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் ஆய்வு ஒன்று கூறியிருந்தது.
லோக்கல் சர்க்கிள்ஸ் ஆய்வு
இதேபோல் தான் தற்போது 'லோக்கல் சர்க்கிள்ஸ்' நடத்திய ஆய்விலும் தெரியவந்துள்ளது. இந்த நிறுவனம் நாடு முழுவதும் 305 மாவட்டங்களில், 2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட பெட்ரோல் வாகனங்களின் 44,000-க்கும் மேற்பட்ட உரிமையாளர்களிடம் கருத்துகளை கேட்டு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் வெறும் மைலேஜ் மட்டுமே கம்மியாகிறது என்ற குற்றச்சாட்டை வாகன ஓட்டிகள் வைக்கவில்லை.. E20 பெட்ரோலைத் தொடர்ந்து பயன்படுத்திய பிறகு, தங்கள் வாகனங்கள் அதிக அளவில் பழுதாவதாகவும், வழக்கத்திற்கு மாறான தேய்மானம் மற்றும் பழுதுகள் ஏற்படுவதாகவும் அதிக எண்ணிக்கையிலான உரிமையாளர்கள் இப்போது கூறுகின்றனர். முன்பை விட இப்போது அதிக வாகன உரிமையாளர்கள் பழுதுபார்ப்பு தொடர்பான சிக்கல்களை ஆய்வில் கூறியிருக்கிறார்கள்.
லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய ஆய்வின்படி, 2023ம் ஆண்டுக்கு முந்தைய வாகனங்களின் உரிமையாளர்கள் 55 சதவீதத்தினர் 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தேய்மானம் அல்லது பழுதுபார்ப்புத் தேவைகள் அதிகரித்திருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர். அதேநேரம் மே 2026-இல் 'லோக்கல் சர்க்கிள்ஸ்' நடத்திய ஆய்வில் இந்த எண்ணிக்கை 29 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது கணிசமாக உயர்ந்திருக்கிறது.
மிகப்பெரிய பழுது ஏற்பட்டுள்ளது
2023ம் ஆண்டுக்கு முந்தைய வாகனங்களின் உரிமையாளர்களில், சிக்கல்களைத் தெரிவித்தவர்களில், 24 சதவீதத்தினர் தங்களது வாகனத்தில் மிகப்பெரிய பழுது ஏற்பட்டது என்று கூறியுள்ளார்கள். 21 சதவீதம் பேர் மீடியமான பழுதுகள் ஏற்பட்டது என்றும் விவரித்தனர். 38 சதவீதத்தினர் மட்டுமே வழக்கத்திற்கு மாறான எதையும் கவனிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதாவது 46 சதவீதம் பேர் பழுது ஏற்படுவதை ஒப்புக்கொண்டுள்ளனர் என்பது தெரியவருகிறது.
எச்சரிக்கையை புறக்கணிக்க முடியாது
இந்த மே மாத ஆய்வு எச்சரிக்கை மணியை ஒலித்திருந்தால், ஜூன் மாதத்தில் 'LocalCircles' நடத்திய ஆய்வு முடிவுகள் , பழுதாவதாக வாகன ஓட்டிகள் கூறும் எச்சரிக்கையை இனி புறக்கணிக்கவே முடியாது என்பதை உணர்த்துகிறது. எத்தனாலின் வேதியியல் பண்புகளே இந்தப் புகார்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று அந்த ஆய்வு கூறுகிறது. ஏனெனில் எத்தனால் ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சக்கூடியது; இது எரிபொருள் டேங்குகள், இன்ஜெக்டர்கள் , பம்புகள் மற்றும் உலோக எரிபொருள் குழாய்களில் அரிப்பை அதிகரிக்கக்கூடும்.
என்னென்ன சேதங்கள்
மேலும், 20 சதவீத எத்தனால் கலவையைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படாத என்ஜினின் ரப்பர் குழாய்கள், சீல்கள் , ஓ-ரிங்குகள் மற்றும் பிளாஸ்டிக் பாகங்களை இது படிப்படியாகச் சிதைக்கக்கூடும். காலப்போக்கில், இத்தகைய பாதிப்புகள் அதிக பராமரிப்புச் செலவுகளுக்கு வழிவகுக்கலாம்; குறிப்பாக E5 அல்லது E10 எரிபொருளுக்காக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மைலேஜ் குறித்த புகார்கள் அதிகரிப்பு
வாகனங்களின் மைலேஜ் குறைவது குறித்தும்'LocalCircles' நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2023-க்கு முந்தைய பெட்ரோல் வாகன உரிமையாளர்களில் 66 சதவீதம் பேர், 2025-ன் தொடக்கத்திலிருந்து தங்கள் வாகனத்தின் மைலேஜ் 10 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக கூறியிருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு இந்த எண்ணிக்கை 45 சதவீதமாக இருந்துள்ளது. மேலும் 23 சதவீதம் பேர் 20 சதவீதத்திற்கும் அதிகமான மைலேஜ் இழப்பைச் சந்திக்கிறார்களாம். மேலும் 3 சதவீதம் பேர் 15 முதல் 20 சதவீதம் அளவிற்குமைலேஜ் வழக்கத்தைவிட குறைந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளனர்; அதேவேளையில் 20 சதவீதம் பேர் 10 முதல் 15 சதவீதம் அளவிற்கு மைலேஜ் குறைவதை உணர்வதாகத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக 10 சதவீதத்திற்கும் அதிகமான மைலேஜ் குறைவதாக புகாரளிக்கும் உரிமையாளர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 21 சதவீதம் உயர்ந்துள்ளது.
பழைய என்ஜினில் இல்லாதது என்ன
இந்தக் குறைவுக்கு முக்கியக் காரணம் எத்தனாலின் குறைந்த ஆற்றல் அடர்த்தி என்று 'லோக்கல் சர்க்கிள்ஸ்' அமைப்பு குறிப்பிடுகிறது. பெட்ரோலை விட எத்தனாலில் ஒரு லிட்டருக்குக் கணிசமாகக் குறைந்த அளவே ஆற்றல் இருப்பதால், அதே செயல்திறனைப் பெற என்ஜின்கள் அதிக எரிபொருளை எரிக்க வேண்டியுள்ளது. நவீன E20-க்கு ஏற்ற வாகனங்களில் உள்ளதைப் போன்ற அடாப்டிவ் என்ஜின் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் (adaptive engine management systems) இல்லாத பழைய என்ஜின்களுக்கு, எரிபொருளின் இந்த மாறுபட்ட குணங்களுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் குறைவாகவே உள்ளது.
நிஜ நிலவம் வேறு
ஆய்வக மதிப்பீடுகளுக்கும் நிஜ உலகப் பயன்பாட்டிற்கும் இடையே இடைவெளி அதிகமாகி உள்ளது தான் தற்போது விவாதமாக உள்ளது. இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் , E20 எரிபொருளால் மைலேஜ் என்பது 1 முதல் 6 சதவீதம் வரை மட்டுமே குறையக்கூடும் என்று மதிப்பிட்டிருக்கிறது. ஆனால், பழைய வாகனங்களில் 8 முதல் 12 சதவீதம் வரை மைலேஜ் இழப்பு ஏற்படுவதாக நிஜ கள ஆய்வுகள் தெரிவித்துள்ளதாக 'லோக்கல் சர்க்கிள்ஸ்' குறிப்பிட்டுள்ளது.
வாகன ஓட்டிகளின் கவலை என்ன
2023க்கு முன்பான வாகனங்களின் உரிமையாளர்களின் இப்போதுள்ள கவலை என்னவென்றால், ஒரு லிட்டர் e20 பெட்ரோலில் வாகனம் எவ்வளவு தூரம் செல்லும் என்பது மட்டுமல்ல, அந்த வாகனம் எவ்வளவு காலத்திற்கு உழைக்கும் என்பது தான். மேலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், E22, E25, E27 மற்றும் E30 உள்ளிட்ட அதிக எத்தனால்-பெட்ரோல் கலவைகளுக்கான எரிபொருள் தரநிலைகளை அரசு மே மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
வேறு வாய்ப்பே இல்லையே
இந்த எரிபொருள்கள் பெட்ரோல் பங்குகளில் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றாலும், இத்தகைய நடவடிக்கை அவற்றின் எதிர்கால அறிமுகத்திற்கான தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்குவது உறுதியாகி உள்ளது. இது E20 என்பது ஒரு இடைக்காலப் படி மட்டுமே என்பதைக் குறிக்கிறது. இன்று E20 நடைமுறையில் உள்ளது; ஆனால் நாளை E30 நடைமுறைக்கு வருமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வரும் ஆண்டுகளில் வாகன ஓட்டிகளுக்கு E20-ஐத் தவிர வேறு வகையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பதும் நிச்சயமற்றதாகவே இருக்கிறது.














Click it and Unblock the Notifications