விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய தமிழ் பெண்.. சுட்டு கொன்ற கொடூர கணவர்.. பெங்களூரில் பயங்கரம்!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு வசித்து வந்த சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதை ஏற்று கொள்ள முடியாத அந்த நபர், மனைவியைச் சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பொதுவாகக் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, யாராவது ஒருவர் கொஞ்சம் விட்டுக் கொடுத்து வாழ்வார்கள். கருத்து வேறுபாடுகள் ஏற்க முடியாத அளவுக்கு அதிகரிக்கும்போதே விவாகரத்து நடக்கும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் விவாகரத்து மிகக் குறைவாகவே இருக்கிறது.

விவாகரத்து
இருப்பினும், சமீப காலங்களில் இந்தியாவிலும் விவாகரத்து பெறும் போக்கு அதிகரித்து வருகிறது. கருத்து வேறுபாடுகள் மிக அதிகமாக அதிகரிக்கும்போது விவாகரத்தே ஒரே வழி என்ற போதிலும், அதை இன்னுமே இந்தியச் சமூகம் முழுமையாக ஏற்கவில்லை. இன்னுமே கூட விவாகரத்து பெறுவோரை இந்தியாவில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள் இதனால் பல வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.
அப்படியொரு மோசமான சம்பவம் தான் பெங்களூரில் நடந்துள்ளது. அங்குக் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மனைவி தனக்கு விவாகரத்து நோட்டீஸை அனுப்பியதை ஏற்கவே முடியாத அந்த நபர், இத்தனை ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த பெண் என்று கூட பார்க்காமல் மனைவியைச் சுட்டுக் கொன்றுள்ளார்.
என்ன நடந்தது
விவாகரத்து நோட்டீஸ் வந்த ஒரே வாரத்தில் அவர் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் 40 வயதான பாலமுருகன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் வேலை முடிந்து கொண்டு வீடு திரும்பிய தனது மனைவி புவனேஸ்வரியை சுட்டுக் கொன்றுள்ளார். மனைவியைத் துப்பாக்கியால் 4 முறை சுட்ட பாலமுருகன், அவர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்துள்ளார். அதன் பிறகே அவரே போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
சேலம் தம்பதி
பாலமுருகன் மென்பொருள் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். இருப்பினும், கடந்த நான்கு ஆண்டுகளாக அவருக்கு வேலை இல்லை.. அவரது மனைவி 39 வயதான புவனேஸ்வரி, யூனியன் வங்கி ஆஃப் இந்தியாவின் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகனும் புவனேஸ்வரியும் 2011இல் திருமணம் செய்து கொண்டனர்.
பாலமுருகனுக்கு பெங்களூரில் வேலை கிடைத்ததால் கடந்த 2018இல் இந்த தம்பதி பெங்களூரில் குடிபெயர்ந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருப்பினும், கணவன் மனைவிக்கு இடையே சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன. குடும்பப் பிரச்சினைகளால் ஒரு வருடத்திற்கும் மேலாகவே இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். புவனேஸ்வரி குழந்தைகளுடன் பெங்களூரில் உள்ள ராஜாஜிநகரில் வசித்து வந்தார்.
சண்டை
புவனேஸ்வரிக்கு திருமணத்தைத் தாண்டிய உறவு இருப்பதாக பாலமுருகன் சந்தேகித்துள்ளார். இதன் காரணமாகவே தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக போலீசார் தெரிவிக்கிறார்கள். இந்தச் சூழலில் தான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புவனேஸ்வரி விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதைப் பார்த்தவுடன் ஆத்திரமடைந்த பாலமுருகன் இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளார்.
விபரீதம்
நேற்று செவ்வாய்க்கிழமை புவனேஸ்வரியை பாலமுருகன் பாலோ செய்துள்ளார். வேலை முடிந்து வீடு திரும்புவதற்காகக் காத்திருந்தார். மாலை 6:30 மணியளவில் புவனேஸ்வரி வீடு திரும்பிய நிலையில், அவரை பாலமுருகன் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் புவனேஸ்வரி படுகாயமடைந்தார். அருகே உள்ளவர்கள் உடனடியாக போலீசாருக்கும் மருத்துவமனைக்கும் தகவல் கொடுத்தனர். இருப்பினும், புவனேஸ்வரி மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே உயிரிழந்தார். பாலமுருகன் அவராகவே போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலமுருகனுக்கு துப்பாக்கி எப்படிக் கிடைத்தது என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள். கணவன் ஆத்திரத்தில் எடுத்த முடிவால் இப்போது அவர்களின் இரு குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications