பஸ் டிக்கெட் விலை 6,667.. ஈவு இரக்கமற்ற 'பகல் கொள்ளை' - கர்நாடக லாக்டவுன் 'கொடுமை'
பெங்களூரு: கர்நாடகாவில் 14 நாட்கள் லாக் டவுன் விதிக்கப்பட்டிருக்கும் சூழலில், பெங்களூருவில் இருந்து வெளியேறும் எண்ணற்ற மக்களை டார்கெட் செய்து தனியார் பேருந்து நிறுவனங்கள் கொள்ளை அடித்துள்ளன.
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்தும் விதமாக அங்கு 14 நாட்களுக்கு லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 10 வரை அமலில் இருக்கும் இந்த லாக்டவுனில் பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.
ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தவிர பிற தொழில் நிறுவனங்கள் இயங்கும். அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 10 மணிக்கும் திறந்திருக்கும் தனியார், சரக்கு வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

படிக்கட்டுகளில் அபாய பயணம்
இந்த லாக் டவுன் காரணமாக, பெங்களூருவில் பணியாற்றும் பலரும், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப பேருந்து நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் குவிந்தனர். இதில், பலரும் டிக்கெட் எடுத்தும் கூட படிக்கட்டுகளில் உட்கார்ந்து அபாய நிலையில் பயணம் செய்யும் நிலைமை ஏற்பட்டது.

மூச்சுத்திணறல்
நேற்று(ஏப்.27) இரவு 9 மணி வரை கூடுதலாக 625 அரசுப் பேருந்துகளை கர்நாடக போக்குவரத்துக் கழகம் இயக்கிய போதும், 'அதெல்லாம் எந்த மூலைக்கு' என்பதாகிவிட்டது நிலைமை. இதனால், பலரும் தனியார் பேருந்துகள் பக்கம் போனால், அங்கு டிக்கெட் விலை கொரோனா தொற்று ஏற்படாமலேயே 'மூச்சுத்திணற' வைத்துவிட்டது

தலை சுத்திடுச்சு
பெங்களூருவில் இருந்து பெலகாவி செல்ல வழக்கமாக ரூ.1000 தான் டிக்கெட் காஸ்ட். ஆனால், நேற்று எவ்வளவு வசூலித்திருக்கிறார்கள் தெரியுமா? 6,667 ரூபாய். அதுவும், இணையதளத்தில் இந்த விலையுடன் தான் டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வருமானமும் போச்சு
முன்னதாக, கர்நாடகாவில் லாக் டவுன் ஏதும் இருக்காது என்று அரசு அறிவித்ததை நம்பி பெங்களூரு வந்த பலரும், இப்போது ஊருக்கும் திரும்ப முடியாமல், வருமானம் இல்லாமல் பெங்களூரிலும் தங்க முடியாமல் அல்லாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த 14 நாட்கள் லாக் டவுன் நீட்டிக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.












Click it and Unblock the Notifications