பெங்களூரின் கோயம்பேடாக மாறிய மெஜஸ்டிக் பஸ் நிலையம்.. கொரோனா ஏற்றுமதி மையமாகுமோ என்று அச்சம்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்களுக்கு வேலை கிடைக்காத சூழ்நிலையில் சொந்த ஊர் திரும்ப ஆசைப்பட்டனர்.
Recommended Video
இதற்காக கட்டணமில்லா பஸ் சேவைகளை கர்நாடக அரசு அறிவித்தது. நேற்று காலை முதல் இந்த பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அதற்கு முந்தைய நாள் இரவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் வந்து குவிந்து விட்டனர். இது பெங்களூரின் மத்திய பகுதியில் சிட்டி ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள முக்கிய பஸ் நிலையமாகும்.

இரவு வந்து தங்கியவர்களுக்கு, சாப்பாடு கொடுப்பது போக்குவரத்து கழகத்திற்கு பெரும் பணியாக மாறிவிட்டது. கால் டாக்ஸி, ஆட்டோ சேவைகளுக்கு சிவப்பு நிற பகுதியான பெங்களூரில் அனுமதி கிடையாது என்பதால் பல கிலோமீட்டர்கள் நடந்து பேருந்து நிலையம் வந்துள்ளனர் தொழிலாளர்கள்.
இப்படியாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மஜெஸ்டிக் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை சுற்றி கூடி விட்டதால் அது மிகப்பெரிய திருவிழா நடைபெறும் இடம் போல மாறிவிட்டது. சமூக இடைவெளி என்பது சுத்தமாக இல்லாமல் போய்விட்டது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய உணவு வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அந்தந்த மாநில அரசுகள் பூர்த்தி செய்திருந்தால், இப்படியான ஒரு நிலைமை ஏற்பட்டிருக்காது. இவர்களில் எத்தனை பேர் நோய்த்தொற்றை பிறருக்கு கொண்டு செல்வார்கள் என்பது தெரியாது.
இப்படித்தான் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்பட்டு, அங்கு மக்கள் பெருமளவில் கூடி, பல மாவட்டங்களுக்கும் நோய்களை ஏற்படுத்தி விட்டனர். பெங்களூரின் இந்த வீடியோ காட்சிகளை பார்க்கும்போது, கர்நாடகாவில் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பிரச்சினையை இன்னும் அதிகப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications