பெங்களூர்: மு.க அழகிரி மாஜி வலது கரம் விகே குருசாமிக்கு சரமாரி அரிவாள் வெட்டு-துரத்திய 25 ஆண்டு பகை!
பெங்களூர்: தமிழ்நாட்டை சேர்ந்த மதுரை முன்னாள் திமுக நிர்வாகி விகே குருசாமியை பெங்களூரில் ஆயுதம் தாங்கிய கும்பல் சரமாரியாக வெட்டி வீசியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த விகே குருசாமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குருசாமியை படுகொலை செய்ய முயன்ற கும்பலை தேடி கர்நாடகா போலீஸ் தனிப்படைகள் தமிழ்நாட்டில் முகாமிட்டுள்ளன.
மதுரையில் ஒருகாலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலது கரங்களில் ஒருவராக இருந்தவர் விகே குருசாமி. மதுரை மாநகராட்சி மண்டல திமுக தலைவராகவும் பதவி வகித்தவர் விகே குருசாமி. இவருக்கும் அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜபாண்டியன் கோஷ்டிக்கும் கடந்த 25 ஆண்டுகாலமாக பகை இருந்து வருகிறது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் போட்டுத்தள்ள தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வதும் போலீசில் சிக்குவதும் தொடர் கதைதான்.

கடந்த ஜனவரி மாதம் கூட விகே குருசாமி கதையை முடிக்க சதித் திட்டம் தீட்டியதாக வழக்கறிஞர் உட்பட 6 பேரை மதுரை போலீசார் கைது செய்திருந்தனர். வழக்கு ஒன்றில் ஜாமீனில் விடுதலையான நிலையில் விகே குருசாமியை போட்டுத் தள்ள ராஜபாண்டியன் கோஷ்டி தீவிரமாக முயற்சித்தது. ஆனால் விகே குருசாமியை அவர்களால் கொலை செய்ய முடியவில்லை.
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு சில நாட்களுக்கு முன்னர் விமானம் மூலம் விகே குருசாமி வந்தார். பெங்களூர் கம்மனஹள்ளி பகுதியில் வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆகும் முடிவோடுதான் குருசாமி பெங்களூர் வந்தாராம். இந்த நிலைய்ல்தான் பெங்களூர் பானசாவடி பகுதியில் குருசாமியை பின் தொடர்ந்த கும்பல் ஆயுதங்களால் சரமாரியாக அவரை வெட்டியது. இதில் குருசாமி ரத்த வெள்ளத்தில் மிதக்க அவருடன் இருந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் படுகாயங்களுடன் தப்பி ஓடினர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் விகே குருசாமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விகே குருசாமி மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல வழக்குகளில் ஏற்கனவே கைதும் செய்யப்பட்டவர். அவரை ராஜபாண்டியன் கோஷ்டி கர்நாடகா வரை துரத்தி வரை வெட்டிய சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து கர்நாடகா போலீசின் 2 தனிப்படைகள் தமிழ்நாட்டின் மதுரையில் முகாமிட்டு கொலையாளிகளை பற்றி விசாரித்து வருகிறது. இச்சம்பவம் பெங்களூரில் மட்டுமல்ல மதுரையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications