‛‛உனக்கெல்லாம் மோடி தான் சரி’’.. இழப்பீடு கேட்ட விவசாயியை விளாசிய டிகே சிவக்குமாரின் தம்பி! சர்ச்சை
பெங்களூர்: கூடுதலாக இழப்பீடு கேட்ட விவசாயியை பார்த்து, ‛‛உனக்கு எல்லாம் பிரதமர் மோடி தான் சரி'' எனக்கூறி மேடையிலேயே கர்நாடகா துணை முதல்வரான டிகே சிவக்குமாரின் தம்பியும், காங்கிரஸ் எம்பியுமான டிகே சுரேஷ் விமர்சனம் செய்தது சர்ச்சையாகி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராகவும், காங்கிரஸ் தலைவராகவும் டிகே சிவக்குமாரும் உள்ளார். டிகே சிவக்குமாரின் தம்பி பெயர் டிகே சுரேஷ். இவர் பெங்களூர் புறநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பியாக இருக்கிறார்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அந்த தொகுதி தான் பெங்களூர் புறநகர். அதன் எம்பியாக தான் டிகே சுரேஷ் உள்ளார்.
இந்நிலையில் தான் கர்நாடகாவில் ராம்நகர் மாவட்டம் மாகடி தாலுகாவில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் டிகே சுரேஷ் எம்பி பங்கேற்றார். அப்போது விவசாயி ஒருவர், ‛‛அரசு சார்பில் விவசாய பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை அதிகரித்து கொடுக்க வேண்டும்'' என கூறினார்.
இதை கேட்டவுடன் டிகே சுரேஷ், ‛‛அரசு சார்பில் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இன்னொரு 5 கிலோ அரிசிக்கு பணம் வழங்கப்படுகிறது. விவசாய பம்புசெட்டுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இப்படி இருந்தும் தினமும் காலையில் பாஜக, ஜேடிஎஸ் கட்சியினரிடம் திட்டு வாங்குகிறோம். ஆனால் நீ அது தாங்க.. இது தாங்க.. என கேட்கிறார்.
நீ எவ்வளவு ரூபாய் வரி கட்டுகிறாய்? வரி கட்டாதவர்களுக்கு இலவசம் கொடுக்க வேண்டாம் என மோடி சொல்கிறார். மோடி சொல்வது தான் உங்களுக்கெல்லாம் சரி என்றால் நான் என்ன சொல்வது? நிலைமையை புரிந்து கொண்டு கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். ஏனோ தானோ என சொல்லக்கூடாது.
அனைவருக்கும் ஆசை இருக்கு. என்ன கொடுத்தாலும் கூட போதுமானதாக இல்லை. அரசு ஊழியர்கள், பஞ்சாயத்து கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள் நிம்மதியின்றி இருக்கின்றனர். காலையில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி நிம்மதியாக யார் கண்விழிக்கிறானோ? அவனே பாக்கியசாலி. நீ நிம்மதியாக இல்லை. உனக்கு ஆசை அதிகமாக இருக்கு. '' என்றார்.












Click it and Unblock the Notifications