பெங்களூர் பிஜி ஹாஸ்டலில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை! இளைஞர் கைது! விசாரணையில் பகீர்
பெங்களூர்: பெங்களூரில் பெண்கள் தங்கும் விடுதிக்குள் நுழைந்த இளைஞர், ஒரு பெண்ணை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் அந்த இளைஞர் இன்று கைது செய்யப்பட்டார். அவரிடம் கொலைக்கான காரணங்களையும் போலீஸார் விசாரித்தனர்.
பீகாரை சேர்ந்த கிருதிகுமாரி (24). இவர் பெங்களூரில் கோரமங்களா 6ஆவது பிளாக்கில் உள்ள வெங்கடரெட்டி லே அவுட் பகுதியில் உள்ள பார்கவி பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார்.

இவர் எம்பிஏ படித்துள்ள நிலையில் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் முதல் இந்த தங்கும் விடுதியில் தங்கி வந்தார். இவர் அந்த விடுதியில் 3ஆவது தளத்தில் அறை எடுத்து தங்கியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி இரவு 11 மணிக்கு தங்கும் விடுதிக்குள் சென்ற இளைஞர் ஒருவர் கிருதிகுமாரியின் அறை கதவை தட்டினார். அப்போது அவர் கதவை திறந்த நிலையில் அவரை வெளியே இழுத்த அந்த இளைஞர் , தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணின் கழுத்தை அறுத்தார்.
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் வலியால் அலறியதை அடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து அங்கிருந்த மற்ற பெண்கள் ஓடிவந்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றன. அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கோரமங்களா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த நபர் டீசர்ட் அணிந்து கொண்டு கருப்பு நிறத்தில் பேண்ட் அணிந்திருந்தார். அவர் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து அவரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தப்பியோடிய இளைஞர் அபிஷேக் என்பது தெரியவந்தது. அந்த பெண்ணை கொலை செய்துவிட்டு மத்திய பிரதேசத்தில் சொந்த ஊரில் பதுங்கியிருந்த அபிஷேக்கை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிருதி குமாரியும் அபிஷேக்கும் காதலித்து வந்தனராம்.
இந்த நிலையில் திடீரென கிருதிகுமாரி தன்னிடம் இருந்து விலகி சென்று விட்டாராம். இதுகுறித்து கிருதிகுமாரியை நிறைய முறை சந்தித்து தன்னுடன் பழகுமாறு அபிஷேக் கூறியும் அவர் மறுத்துவிட்டாராம். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தால் அவரை கொன்றேன் என அபிஷேக் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிஜி ஹாஸ்டல், அதிலும் பெண்கள் விடுதி என்றால் அங்கு ஆண்களுக்கு அனுமதி இருக்காது. ஆயினும் அபிஷேக் எப்படி அந்த ஹாஸ்டலுக்குள் நுழைந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் விடுதியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக போலீஸார் கருதிய நிலையில் ஹாஸ்டல் நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications