முடா வழக்கு.. முதல்வர் சித்தராமையாவின் மனைவியை அமலாக்கத்துறை விசாரிக்க இடைக்கால தடை
பெங்களூர்: முடா நில ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பி.எம். பார்வதி மற்றும் கர்நாடகா மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பி.எஸ். சுரேஷா ஆகியோரை விசாரிக்கக அமலாக்கத்துறை அனுப்பிய தனித்தனி சம்மன்களுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை வைத்துள்ளது.
கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் (முடா), மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆர்டிஐ ஆர்வலர் சினேகமாயி கிருஷ்ணா குற்றச்சாட்டு எழுப்பினார். பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத நிலத்தை எடுத்துக்கொண்டு நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலத்தை வழங்கியதில் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் ஆர்டிஐ ஆர்வலர் சினேகமாயி கிருஷ்ணா புகாரில் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சினேகமயி கிருஷ்ணா, டி.ஜே.ஆபிரகாம் மற்றும் பிரதீப்குமார் ஆகியோர் கர்நாடகா ஆளுநர் தாவா்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தனர். இதை ஏற்று கவர்னர் தாவர்சந்த் கெலாட் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து மைசூரு லோக் அயுக்தா சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன், பார்வதியிடம் இருந்து மூடாவால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் முன்னாள் உரிமையாளர் தேவராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் இதுபற்றி அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லோக் அயுக்தா போலீசார் முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தியிருந்தனர். மேலும் மூடா அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையும் நடத்தினர். தற்போது லோக் அயுக்தா போலீசாரின் விசாரணை முடிந்துவிட்டது. இதையடுத்து வருகிற 27-ந் தேதிக்குள் விசாரணை அறிக்கையை, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று லோக் அயுக்தா போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்கு முன்னதாகவே லோக் அயுக்தா போலீசார் பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மூடா நில முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இது ஒருபுறம் எனில், அமலாக்கத்துறை முன் ஆஜராக வேண்டும் என்று முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி மற்றும் ர்நாடகா மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பி.எஸ். சுரேஷா ஆகியோரை தனித்தனியாக விசாரிக்க அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இருவரும் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது லோக்ஆயுக்தா காவல்துறையின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா அமர்வு, பிரதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், அவர்களை அழைப்பதற்கு அமலாக்கத்துறை ஏன் அவசரம் காட்டுகிறது எனறு கேள்வியது. அத்துடன் பிப்ரவரி 10 ஆம் தேதி அடுத்த விசாரணை வரை பார்வதி மற்றும் சுரேஷா மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.












Click it and Unblock the Notifications