நிர்வாணமாய் செல்போன் கடைக்குள் நுழைந்த நபர்.. சுவரை துளையிட்டு செய்த வேலை.. சிசிடிவியில் ஷாக்
பெங்களூர்: பெங்களூரில் முகத்தில் மாஸ்க் மட்டும் அணிந்து, உடலில் துணி எதுவும் அணியாமல் நள்ளிரவில் கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்த நபர் 85 செல்போன்களை அள்ளி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் உடலில் துணி அணியாமல் வந்து கைவரிசை காட்டியதன் பின்னணி குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

பெங்களூர் ஒங்கசந்திராவில் ஹனுமான் டெலிகாம் என்ற பெயரில் செல்போன் கடை உள்ளது. இந்த கடையை தினேஷ் என்பவர் நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவில் பூட்டுப்போட்டு பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
அதன்பிறகு மறுநாள் காலையில் வழக்கம்போல் செல்போன் கடையை திறந்து உள்ளே நுழைந்தார். அப்போது தினேசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவரது கடையில் இருந்த ஏராளமான செல்போன்கள் மாயமாகி இருந்தது. கடையின் பின்பக்க சுவரில் ஒருவர் வந்து செல்வதற்கு வசதியாக துளை போடப்பட்டு இருந்தது.
இரவில் கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்த நபர் செல்போன்களை திருடி சென்றதை அவர் உணர்ந்தார். இதுபற்றி உடனடியாக அவர் பொம்மனஹள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்து கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தோம்.
அப்போது இரவில் சுவரின் துளையிட்ட நபர் முகத்தில் மாஸ்க் மட்டும் அணிந்து உள்ளே நுழைகிறார். அவர் வேறு எந்த ஆடையும் அணியவில்லை. அதன்பிறகு அடுத்த சில நிமிடங்களில் கடையின் செல்ப்பில் இருந்த 85 செல்போன்களை திருடிவிட்டு அதே சுவரின் துளை வழியாக வெளியேறி செல்வது பதிவாகி இருந்தது. முகத்தில் மாஸ்க் அணிந்திருந்ததால் அந்த நபரின் முகம் சரியாக தெரியவில்லை.
இருப்பினும் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் அந்த நபர் எதற்காக நிர்வாணமாக வந்திருப்பதன் பின்னணியில் முக்கிய காரணம் இருக்கலாம். சில வழக்குகளில் குற்றவாளிகளை அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் காட்டி கொடுத்து விடும். இதனால் அப்படி போலீசில் சிக்காமல் இருந்த அந்த நபர் ஆடை எதுவும் அணியாமல் முகத்தை மறைக்க மாஸ்க் அணிந்து கைவரிசை காட்டி இருக்கலாம்'' என்றனர்.












Click it and Unblock the Notifications