ஹிஜாப்புக்கு அனுமதி வேண்டும்! கர்நாடகாவில் நாளை இஸ்லாமிய அமைப்புகள் பந்த்! பாதுகாப்பு தீவிரம்
பெங்களூர்: ஹிஜாப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகத்தில் நாளை முஸ்லிம் அமைப்புகள் சார்பில் பந்த் நடத்தப்பட உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் மார்ச் 21ம் தேதி போராட்டங்கள், பேரணிகள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.

தீர்ப்பு
தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையல் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

எதிர்ப்பு
இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாதகிரியில் மாணவிகள் தேர்வை புறக்கணித்து வெளியேறினர். உத்தர கன்னடா மாவட்டம் பட்கலில் கடைகள் அடைத்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் தீர்ப்பு தொடர்பாக முஸ்லிம் அமைப்பினர் ஆலோசனை கூட்டங்களை நடத்தினர்.

நாளை பந்த்
இந்நிலையில் கர்நாடகம் முழுவதும் நாளை முழுஅடைப்பு(பந்த்) போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த பந்த் நடத்தப்பட உள்ளது. இதனால் நாளை மாநிலம் முழுவதும் கடைகளை அடைத்து ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

போலீஸ் பாதுகாப்பு
இந்த பந்த் அறிவிப்பால் கர்நாடகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தில் முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹிஜாப் தடையை எதிர்த்து மாணவிகள் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் ஹோலி விடுப்புக்கு பிறகு விசாரணை நடத்துவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications