தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கை.. பட்ஜெட்டில் சித்தராமையா அறிவிப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் தேசியக் கல்விக் கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கை கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா இன்று தனது பட்ஜெட் உரையின் போது தெரிவித்துள்ளார். நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகா கடந்த 2021 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது.
கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக சித்தரமையா பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் அரசு, 2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. 2023-24 நிதியாண்டின் இது இரண்டாவது பட்ஜெட் ஆகும். கடந்த பாஜக ஆட்சியில் தேர்தலுக்கு முன்பாக பாதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீதி பட்ஜெட்டை காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார்.

நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள சித்தராமையா, இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இது என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கர்நாடகா தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்த திட்டங்களை நிறைவேற்ற அரசுக்கு தேவைப்படும் நிதி உள்ளிட்ட செலவீனங்களை ஈடுகட்டுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என மக்கள் எதிர்பார்த்ததால் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்த பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்யும் போது வணிகத் துறையிலிருந்து 1,01,000 கோடி ரூபாய், கலால் துறையிலிருந்து 36,000 கோடி ரூபாய், முத்திரைகள் மற்றும் பதிவுத் துறையிலிருந்து 25,000 கோடி ரூபாய் என மூன்று துறைகளில் இருந்து மொத்தம் 1,62,000 கோடி ரூபாய் அளவிலான வருவாயை வசூல் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து தனது பட்ஜெட் உரையின் போது, கர்நாடக மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கை கொண்டு வரப்படும் என்றும் அறிவித்தார். கர்நாடாகாவில் முந்தைய பாஜக அரசு நாட்டிலேயே முதல் மாநிலமாக தேசிய கல்விக் கொள்கையை கடந்த 2021 அம் ஆண்டு அமல்படுத்தியது.
இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தேசிய கல்விக் கொள்கையை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்த சித்தராமையா அரசு முடிவு செய்துள்ளது. இது மட்டும் இன்றி மேகதாது அணை குறித்தும் பேசிய சித்தராமையா, "மேகதாது அணை கட்டுவதற்கான ஒப்புதலை பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications