"ட்விஸ்ட்!" அமித்ஷா வருகை.. ஓரம் கட்டப்படும் பசவராஜ் பொம்மை? எடியூரப்பா கூறிய பரபர கருத்து! பின்னணி
பெங்களூர்: கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை அமைச்சரவை மாற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக அம்மாநில முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே அமைதியற்ற ஒரு சூழலே இருந்து வருகிறது. முதலில் பல வாரங்களுக்கு அங்குத் தொடர்ந்து ஹிஜாப் சர்ச்சை நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பின்னரே முடிவுக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து இந்து கோயில் முன் கடை வைத்திருந்த இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டது, ஹலால் இறைச்சி எனத் தொடர் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாகக் கர்நாடக மாநிலத்தில் அமைதியற்ற ஒரு சூழலே காணப்படுகிறது.

கர்நாடக அரசியல்
அடுத்தாண்டு அங்குத் தேர்தல் நடக்கும் நிலையில், ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளது. அங்குக் கர்நாடகாவில் முதல்வராக இருந்த எடியூரப்பா நீக்கப்பட்டு, 9 மாதங்களுக்கு முன்பு தான் பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்வராகக் கொண்டு வரப்பட்டார். இதனிடையே பசவராஜ் பொம்மை ஆட்சியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதனால் அவரை வைத்துக் கொண்டு தேர்தலைச் சந்திப்பது சரியாக இருக்குமா என்ற ஆலோசனையில் இறங்கி உள்ளது பாஜக தலைமை!

அமைச்சரவை மாற்றம்
கடந்த சில நாட்களாகவே கர்நாடக அமைச்சரவையில் பெரியளவில் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது. அங்குப் பரவிய தகவலுக்கு வலுசேர்க்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நேற்று பெங்களூர் சென்று இருந்தார். இது அமைச்சரவை மாற்றம் குறித்த யூகங்களுக்கு வலுசேர்ப்பதாக அமைந்துவிட்டது. சமீபத்தில் தான், அக்கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷும், தேவைப்பட்டால் மாநிலத் தலைமைகளில் மொத்தமாகக் கூட மாற்றங்களைச் செய்ய பாஜக தலைமைக்குத் தைரியமும் வலிமையும் உள்ளது கூறி இருந்தது கவனிக்கத்தக்கது.

தேர்தல் மாநிலங்கள்
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மக்களிடையே இருக்கும் அதிருப்தியைக் குறைக்க அமைச்சரவையை மாற்றுவதை பாஜக தலைமை வழக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் அமைச்சரவை மாற்றப்பட்டது. அதேபோல இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை எதிர்கொள்ளும் குஜராத் மாநில்தில் அமைச்சரவை மொத்தமாக மாற்றப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த மாநிலங்களில் இருக்கும் அரசியல் சூழல் கர்நாடகாவில் இல்லை என்பதால் பாஜக தலைமை பொறுமையாக இருந்து வருகிறது.

எடியூரப்பா
பசவராஜ் பொம்மை எப்போது வேண்டுமானாலும் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், இது தொடர்பாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரையில் தலைமையில் எவ்வித மாற்றமும் இருக்காது. தற்போது முதல்வராக உள்ள பசவராஜ் பொம்மை பாராட்டுக்குரிய பணியைச் செய்து வருகிறார். எனக்குத் தெரிந்தவரைக் கர்நாடக முதல்வர் மாற்றப்பட வாய்ப்புகள் குறைவு" என்று கூறினார்.

முதல்வர் தரப்பு
அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்களை பசரவாஜ் பொம்மை தரப்பும் தொடர்ந்து மறுத்தே வருகிறது. அமைச்சராக வேண்டும் என்ற விருப்பத்தில் இருக்கும் சில பாஜக தலைவர்களே இதுபோன்ற தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்புவதாக முதலமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. பசரவாஜ் பொம்மை மீது பெரியளவில் அதிருப்தி என்று எதுவும் இல்லாத சூழலில் அவரை மாற்றத் தேவையில்லை என்றே கூறப்படுகிறது.

காண்டிராக்டர் தற்கொலை
அதேநேரம் கர்நாடகாவில் சில வாரங்களுக்கு முன்பு காண்டிராக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அங்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. அவர் கடைசியாகத் தனது நண்பர்களுக்கு அனுப்பிய மெசேஜில் அமைச்சரைக் குற்றஞ்சாட்டி இருந்தார். இது கர்நாடகா அரசின் இமேஜை கடுமையாகப் பாதித்துள்ளது. இதையெல்லாம் ஆலோசித்தே கர்நாடக அரசு இறுதி முடிவை எடுக்கும்.












Click it and Unblock the Notifications