கொரோனா வைரஸ் அவசர நிலை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. கர்நாடகா அரசு
பெங்களூரு: கொரோனா வைரஸ் காரணமாக கர்நாடகாவில் அவசர நிலை பிறப்பிக்கப்படவில்லை என்றும் மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் கர்நாடகா அரசு விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் 4000 பேரை பலி கொண்டுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. கேரளாவில 10க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
அமெரிக்காவில் இருந்து திரும்பிய கர்நாடகா சாப்ட்வேர் இன்ஜினியருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் சுமார் 4 பேர் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் சுமார் 60 பேரை வரை கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர் உயிரிழப்பு
இந்நிலையில் கர்நாடகாவின் கலபுரகியில் முகமது ஹுசைன் சித்தின் என்ற 76 வயது முதியவர் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தார். அவர் கொரோனாவால் உயிரிழந்ததாக அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரது இரத்த மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது . முடிவுகள் வந்த பிறகே கொரோனாவால் இறந்தாரா என்பது குறித்து தெரியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கர்நாடகாவில் சுமார் 1000 பேர் கொரோனா அச்சம் காரணமாக கண்காணிப்பில் வைக்கப்படுள்ளதாகவும், இதில் 446 பேரின் இரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் முதல்வர் எடியூரப்பா தெரிவித்து இருந்தார்.

பள்ளிகள் இயங்கும்
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கர்நாடகாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள், அலுவலகங்களை மூட உத்தரவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியது. இதை கர்நாடகா அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக கர்நாடகா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு பள்ளிகள் மற்றும் அலுலவங்களுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தேவையான போது முடிவெடுக்கலாம்.

போக்குவரத்துக்கு தடை
கொரோனா வைரஸ் ஒருவேளை ஏற்பட்டால் அந்த பகுதியில் மக்களை நுழைவதற்கும் வெளியேறுவற்கும் தடை விதிக்கலாம். இதேபோல் பள்ளிகள் அலுவலங்களை மூடுவதற்கும் பொதுக்கூட்டங்களை ரத்து செய்வதற்கும் உத்தரவு பிறப்பிக்கலாம். போக்குவரத்திற்கும் தடை விதிக்கலாம். இதேபோல் எந்த ஒரு அரசு அல்லது தனியார் கட்டிடத்தை கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு உரிமை உண்டு.

விதிகளை மீறாதீர்
கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அனைத்து அரசுத் துறைகளின் ஊழியர்களும் சம்பந்தப்பட்ட பகுதியின் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை மீறியதாக கண்டறியப்பட்ட எந்தவொரு நபரும், நிறுவனமும் அல்லது அமைப்பும், ஐபிசியின் 188 வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாகக் கருதப்படும் இவ்வாறு கர்நாடகா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications