விவசாயி உடுத்தியிருந்த ஆடை டீசன்ட்டா இல்லையாம்.. பெங்களூர் மெட்ரோ ரயிலுக்குள் அனுமதி மறுப்பு
பெங்களூர்: விவசாயி ஒருவரை, அவரது அழுக்கு ஆடையை காரணம் காட்டி மெட்ரோ ரயிலில் ஏறக்கூடாது என தடுக்கப்பட்ட சம்பவம் பெங்களூரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகரியை மெட்ரோ ரயில் நிர்வாகம் பணிநீக்கம் செய்திருக்கிறது.
இன்ற காலை வழக்கம் போல மெட்ரோ ரயில் சேவை சுறுசுறுப்பாக இயங்கி வந்தது. பயணிகளோடு பயணிகளாக வயதான விவசாயி ஒருவர், தலையில் மூட்டையுடன் அழுக்கு படிந்த ஆடையில் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தார். தனது பயணத்திற்கான டிக்கெட்டை பெற்ற அவர், ரயிலில் ஏறுவதற்கு நடைமேடை நோக்கி நகர்ந்திருக்கிறார். இடையில் பாதுகாப்பு செக்கிங் இருந்திருக்கிறது. அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த மேற்பார்வையாளர், விவசாயியை ரயில் ஏற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார்.

முறையான செக்கிங்கிற்கு பின்னரும் கூட அவர் ரயில் ஏற அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து சக பயணி கேள்வி பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனாலும், விவசாயியை மேற்பார்வையாளர், ரயிலில் பயணிக்க அனுமதிக்கவில்லை. விவசாயி கன்னட மொழி தெரியாமல், டிக்கெட் இருந்தும் ரயில் ஏற முடியாமல் தயங்கி நிற்பதும், மேற்பார்வையாளர் அவரை அனுமதிக்க மாட்டேன் என்று கறாராக இருந்ததும் சக பயணிகளிடையே ஆவேசத்தை எழ செய்தது.
இதனையடுத்து மற்றொரு பயணியும், பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம் வாக்குவாதம் செய்ய, இறுதியாக விவசாயி ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியது. இதனையடுத்து, விவகாரம் தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் உரிய விசாரணை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விசாரணையை தொடர்ந்து, விவசாயியை அனுமதிக்காத மெட்ரோ ரயில் பாதுகாப்பு மேற்பார்வையாளரை நிர்வாகம் பணிநீக்கம் செய்திருக்கிறது.
போக்குவரத்து எளிதாக இருக்க வேண்டும்தான் மெட்ரோ போன்ற ரயில் சேவைகள் உருவாக்கப்பட்டுள்ளதே தவிர, மேட்டுக்குடி மக்களுக்கு என்று தனியாக உருவாக்கப்படவில்லை என சோஷியல் மீடியாவில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதேபோன்ற சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டிலும் நடந்தது. அதாவது சென்னை சென்ட்ரலிலிருந்து செல்லும் மெட்ரோ ரயிலில் ஏற கட்டிட தொழிலாளர்கள் முயன்றனர். ஆனால், கூர்மையான கட்டுமான பொருட்களை வைத்திருப்பதாக கூறி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது பெரும் விவாதமாக வெடித்த நிலையில், தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications