ஆபரேஷன் லோட்டஸை முறியடிக்க குமாரசாமி அதிரடி.. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகும் அரசு
Recommended Video
பெங்களூர்: சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என பாஜகவுக்கு முதல்வர் குமாரசாமி பதிலடி அளித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன் தொடங்கியது. நேற்றைய தினம் இரண்டாவது கூட்டத்தில் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால் முதல்வர் எச் டி குமாரசாமி பதவி விலக வேண்டும் என பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனால் பெங்களூர் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் எச் டி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஒத்துழைப்பு
அப்போது அவர் கூறுகையில் பாஜகவினர் சட்டசபை நடவடிக்கைகளுக்கு குறுக்கீடு செய்யும் வகையில் தர்ணா போராட்டம் நடத்துகிறார்கள். அவை சுமுகமாக நடைபெற அவர்கள் ஒத்துழைத்தால் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார்.
எதற்கு தர்ணா
பெரும்பான்மை இல்லை என கூறி பாஜகவினர் தர்ணா நடத்துவதற்கு பதிலாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக கொண்டு வர வேண்டும். எதற்காக தர்ணா நடத்துகிறார்கள் என தெரியவில்லை.
நடைமுறை
நாடாளுமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, அதன் பிரதியை உறுப்பினர்களுக்கு வழங்குவது இல்லை. பட்ஜெட் முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட பிறகே புத்தகம் வழங்கப்படுகிறது. அந்த நடைமுறையை தான் இப்போது நான் இங்கே பின்பற்ற முடிவு செய்துள்ளேன் என்றார்.
ஆபரேஷன் லோட்டஸ்
கர்நாடகத்தில் மஜத- காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு பாஜக ஆட்சி வர முயற்சிக்கிறது. அதற்காக ஆபரேஷன் லோட்டஸ் என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
ஆட்சி கவிழும்
அதன்படி மஜத- காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதாக குமாரசாமி குற்றம்சாட்டியிருந்தார். மேலும் சில எம்எல்ஏக்கள் பதவி விலகி பாஜகவில் இணைய போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸுடன் குமாரசாமிக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் ஆட்சி கவிழும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.