இங்க பார்த்தீங்களா அநியாயத்தை.. பெங்களூரில் கர்நாடக மாநில பேரணி நடத்த ஹிந்தி மாணவர்கள் எதிர்ப்பு
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் (Indian institute of science (IISc) ) கன்னட மொழி பேசும் மாணவர்களும் இந்தி மொழி பேசும் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடும் மோதலில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டைப் போல இந்தி மொழி திணிப்பை கடுமையாக கர்நாடகா எதிர்த்து வரும் நிலையில் கன்னட மொழி மாணவர்களுடன் இந்தி மொழி பேசும் மாணவர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்திருப்பது பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா என தென்னிந்திய மாநிலங்களில் இந்தி மொழி திணிப்புக்கு எப்போதும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இதில் தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகாவும் தீவிரம் காட்டுகிறது. மத்திய அரசின் இந்தி மொழி நாளை இந்தி துக்க தினம் என்றெல்லாம் கடைபிடித்தவர்கள் கன்னடர்கள். கர்நாடகாவில் கன்னட மொழியில்தான் பெயர் பலகைகள் இருக்க வேண்டும்; பிற மொழிகளில் குறிப்பாக இந்தி மொழியில் இருக்கக் கூடாது என தார்பூசி அழிக்கிறவர்கள் கன்னடர்கள்.

கர்நாடகாவில் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வட இந்தியர்கள்- இந்தி மொழி பேசுகிறவர்களும் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் உருவான நாளை முன்னிட்டு கன்னட மாணவர்கள் நடத்திய பேரணிக்கு இந்தி மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் தனி மாநிலமாக உருவான நாள் நவம்பர் 1. இந்த நாள் கர்நாடக மாநிலம் உருவான நாளான- Kannada Rajyotsav என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கர்நாடகாவுக்கான தனி கன்னட கொடி ஏற்றப்பட்டு இந்த நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். கர்நாடகா மாநில அரசு விழாவாக நவம்பர் 1-ந் தேதி கர்நாடகா மாநிலம் உருவான நாள் கொண்டாடப்பட்டும் வருகிறது.
பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள indian institute of science (IISc)-ல் கன்னட மொழி மாணவர்கள் கர்நாடகா மாநில உருவான நாளை ஒட்டி பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கன்னட மொழி பேசும் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர். ஆனால் திடீரென இந்த நிறுவனத்தில் பயிலக் கூடிய இந்தி மொழி பேசும் மாணவர்கள், கன்னட மாணவர்களின் பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் தாங்கள் சுட்டிக்காட்டும் பாதையில்தான் பேரணியை நடத்த வேண்டும் என்றும் கன்னட மொழி பேசும் மாணவர்களை மிரட்டினர். இந்தி மொழி பேசும் மாணவர்களின் இந்த தேவையற்ற தலையீட்டினால் அங்கு பதற்றமும் மோதலும் உருவாகும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சதாசிவம் நகர் போலீசார் இந்த விவகாரத்தில் தலையிட்டனர்.
தற்போது கன்னட மொழி பேசும் மாணவர்கள் தாங்கள் திட்டமிட்ட பாதையிலேயே பேரணியை நடத்த உள்ளனர். இதற்கு போலீசாரும் பாதுகாப்பு அளிக்கின்றனர். வட இந்திய மாநிலங்ளில் இருந்து கல்வி பயில வந்த இடத்தில் இந்தி மொழி மாணவர்கள் ஒருங்கிணைந்து கன்னட மொழி பேசும் மாணவர்களுக்கு அவர்களது சொந்த மாநிலத்திலேயே எதிராக மல்லுக்கட்டியிருப்பது அதிர்ச்சியையும் பதற்றத்தையும் உருவாக்கி இருக்கிறது. இதனால் அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications