கிளம்பிய எதிர்ப்பு.. தொகுதி மாறும் ராகுல்? வயநாட்டுக்கு பதில் கர்நாடகாவில் களமிறங்க வாய்ப்பு.. ஏன்?
பெங்களூர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் இருந்து போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு அதன் பின்னணி குறித்த முக்கிய தகவலும் கசிந்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் என்பது நடக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையே தான் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கி விட்டன. நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது.

அதேவேளையில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதற்கிடையே தான் தற்போது 5 மாநில தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இதில் மத்திய பிரதேத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. தெலுங்கானாவில் ஆட்சியை காங்கிரஸ் பிடித்த நிலையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் அந்த கட்சி ஆட்சியை இழந்துள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் பாஜக வாகை சூடியுள்ளது. மிசோரமை பொறுத்தமட்டில் இசட்.எம்.பி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களில் ஒன்றில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் 2 மாநிலங்களை பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. மாறாக மிசோரம், மத்திய பிரதேசத்தில் வழக்கம்போல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது.
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தல் தோல்வி என்பது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ‛இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ் தலைமையை ஏற்க பல கட்சிகள் விரும்பவில்லை. இந்த 5 மாநில தேர்தல்களில் ஓரளவு வெற்றி பெற்றிருந்தால் நிலைமை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாறலாம் என்ற நிலையில் தோல்வி தான் கிடைத்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி இக்கட்டான சூழலில் உள்ளது.
அதோடு இன்று டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டவர்கள் ஆலோசனைக்கு செல்ல விரும்பவில்லை என்ற தகவல் பரவிய நிலையில் அந்த கூட்டம் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படி காங்கிரஸ் கட்சி இக்கட்டான நிலையை சந்தித்து வரும் நிலையில் தான் ராகுல் காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் இருந்து போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது ராகுல் காந்தி கடந்த 2019 தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரளா மாநிலம் வயநாட்டில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோற்ற ராகுல் வயநாட்டில் வெற்றி பெற்று எம்பியானார். சில நாட்களுக்கு முன்பு வயநாடு தொகுதிக்கு சென்ற ராகுல் காந்தி, ‛‛வயநாடு எனது 2வது வீடு மற்றும் குடும்பம் போல் இருக்கிறது'' என்றார். இதனால் மீண்டும் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் தான் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
அதாவது கேரளாவில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் ஒரே மாநிலமாக கேரளா உள்ளது. இந்த கட்சி தற்போது ‛இந்தியா' கூட்டணியில் இருக்கிறது. இதனால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வாக்கு உள்ள கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடக்கூடாது. அவர் கர்நாடகா அல்லது பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறி வருகின்றனர். இதனால் தர்மசங்கடமான நிலைக்கு ராகுல் தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் ‛இந்தியா' கூட்டணியை மனதில் வைத்து ராகுல் காந்தி கர்நாடகாவில் போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் வெற்றி பெற்றது. அதோடு முதல்வர் சித்தராமையா, கர்நாடகா காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமார் உள்ளிட்ட சக்தி வாய்ந்த தலைவர்கள் கர்நாடகாவில் உள்ளனர்.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கும் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல செல்வாக்கு உள்ளது. இத்தகைய சூழலில் ராகுல் காந்தி அங்கு போட்டியிட்டால் அது காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை நாடாளுமன்ற தேர்தலில் பெற்று கொடுக்கும். மேலும் தென்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கும் பிளஸ் பாயிண்டாகவும் மாறும் என கூறப்படுகிறது. இதனால் ராகுல் காந்தி கர்நாடகாவில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications