உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி உடல்நிலை மோசம்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
பெங்களூர்: கர்நாடக மாநிலத்திலுள்ள புகழ் பெற்ற உடுப்பி பெஜாவர் மடத்தின், மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி உடல்நலக்குறைவு காரணமாக மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
நிமோனியா மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு, விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிக்கு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாக விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிஜி தெரிவித்ததையடுத்து, அவர் உடுப்பி நகரிலுள்ள மணிபால் கஸ்தூரிபா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
88 வயதாகும் விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி, 1931ஆம் ஆண்டு ராமகுஞ்சா என்ற ஊரில் பிறந்தார். தனது எட்டாவது வயதில் அவர் சன்னியாசம் பூண்டார். இவரது வித்யா குரு, ஸ்ரீ பண்டர் கேரி மற்றும் ஸ்ரீ பலிமரு மடத்தின், ஸ்ரீ வித்யமான்ய தீர்த்தரு ஆகும்.
தனக்கு பின்னால், பெஜாவர் மடத்தின் மடாதிபதியாக வேண்டியவர் என்று, சன்னியாசி சுவாமியான, விஸ்வபிரசன்ன தீர்த்தாவை ஏற்கனவே, விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி நியமித்துள்ளார். அரசியல் ரீதியாக, அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலருக்கும், விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி நெருக்கமானவர்.
ஆர்.எஸ்.எஸ் இணைச் செயலாளர் பய்யாஜி ஜோஷி, கர்நாடக அமைச்சர் ஜே.சி.மாதுசாமி, மணிப்பால் குழும மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் ரஞ்சன் பை ஆகியோர் பெஜாவர் மடாதிபதியின் உடல்நிலை குறித்து நேரில் கேட்டறிந்துள்ளனர்.
விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி கடந்த 20ஆம் தேதி அதிகாலை முதல், மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு வென்டிலேட்டர் வசதியுடன் சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications