பெங்களூர் வேண்டவே வேண்டாம்.. கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்.. பின்னணி
பெங்களூர்: பெங்களூரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல், குண்டு குழியுமான சாலை, தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்களில் ஒரு தரப்பினர் தங்களின் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக நகரை விட்டு வெளியேறி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:
இந்தியாவின் ‛சிலிக்கான் சிட்டி' என்று பெங்களூர் அழைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பல்வேறு முக்கிய ஐடி நிறுவனங்கள் பெங்களூரில் அமைந்து இருப்பது தான். இதனால் கர்நாடகா மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை நிமித்தமாக ஒவ்வொரு ஆண்டுகள் பெங்களூரில் குடியேறி வருகின்றனர்.

தற்போது பெங்களூர் மக்கள்தொகை என்பது 1 கோடியை கடந்த விட்டது. அதேபோல் வாகனங்களும் அதிகமாக பெருகிவிட்டது. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. குறிப்பாக காலை, மாலை வேளைகளில் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நிறைந்து காணப்படும். சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது.
இப்படி போக்குவரத்து நெரிசல் ஒரு பக்கம் என்றால் மறுபுறம் சரியான சாலை வசதிகள் இல்லை. பல சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இது போதாது என்று கோடைக்காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு, மக்கள் தொடர்ந்து அதிகரிப்பதால் வீட்டு வாடகை, நிலத்தின் மதிப்பும் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கு தீர்வு காண்பதில் கர்நாடகா அரசு தோல்வியடைந்துவிட்டதாக பெரிய பெரிய நிறுவனங்களின் உயரதிகாரிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இப்படியான சூழலில் தான் ஐடி நிறுவனங்கள் உள்பட பிற துறைகளில் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் பலரும் தங்களின் குடும்பத்துடன் பெங்களூரை விட்டு வெளியேற திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. போக்குவரத்து நெரிசல், குண்டும் குழியுமான சாலை, தண்ணீர் பிரச்சனை, வீட்டு வாடகை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் அவர்கள் பெங்களூரை விட்டு அருகே உள்ள பிற நகரங்களில் குடியேறி வருகின்றனராம்.
இதுதொடர்பாக Investment Banker சார்தாக் அஹுசா தனது லிங்க்இன் பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், ‛‛பெங்களூரில் வசிக்கும் மக்கள் பெரும் வாழ்வாதார பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இதனால் பலரும் பெங்களூர் நகரை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் போக்குவரத்து நெரிசலாகும். உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களின் பட்டியலில் பெங்களூர் 3வது இடத்தில் உள்ளது. பெங்களூரில் வசிக்கும் மக்கள் சராசரியாக ஆண்டுக்கு 134 மணிநேரத்தை போக்குவரத்து நெரிசலில் சிக்கி செலவிடுகின்றனர்.
இதுதவிர காற்று மாறுபாடு, தண்ணீர் பிரச்சனை உள்ளிட்டவையும் பெங்களூரை விட்டு மக்கள் வெளியேற முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக அவர்கள் அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட சிறிய நகரங்களை குறிவைத்து நகர தொடங்கி உள்ளனர். அந்த வகையில் அவர்களின் தேர்வு மைசூராக உள்ளது. மைசூரில் நீங்கள் எந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும் வெறும் 15 நிமிடங்களில் செல்ல முடியும். அதேபோல் வாழ்வாதார செலவும் கூட பெங்களூரை விட 10 முதல் 20 சதவீதம் வரை குறைவாக உள்ளது.
அதேபோல் சொத்துக்களின் விலையும் குறைவாக உள்ளது. பெங்களூரை ஒப்பிடும்போது சொத்துகளின் மதிப்பு 30 முதல் 50 சதவீதம் குறைவாக உள்ளது. மைசூரின் குவெம்பு நகர், விஜயநகரில் அபார்ட்மென்ட்டுகள் ரூ.60 லட்சத்துக்கு கிடைக்கின்றன. சரஸ்வதி புரம், ஜெயலட்சுமிபுரத்தில் ரூ.1 கோடியில் கிடைக்கின்றன. மேலும் பெங்களூர் - மைசூர் எக்ஸ்பிரஸ் ரோடு பணிகள் முடிவடைந்துவிட்டது. இதனால் மைசூரில் இருந்து எளிதாக பெங்களூருவுக்கு வந்து செல்லலாம்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications