நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரஜ்வல்.. 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி
பெங்களூர்: பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பியதும் பெங்களூர் விமான நிலையத்தில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் இருந்து பெங்களூர் திரும்புவதற்கான விமான டிக்கெட்டை பிரஜ்வல் ரேவண்ணா முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து நேற்று முனிச் நகரில் இருந்து புறப்பட்ட அவர் நேற்று நள்ளிரவில் பெங்களூர் திரும்பினார். கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக் குழு தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அங்கு கடந்த 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது. மேலும் அவரது வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பியோடினார். சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 2 முறை லுக் அவுட் நோட்டீஸும் ஒரு முறை புளூ கார்னர் நோட்டீஸும் பிறப்பித்தனர். அவரது தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதினர்.
மத்திய அரசின் உதவியுடன் பிரஜ்வல் ஜெர்மனிக்கு சென்றுள்ளார் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. சர்வதேச போலீஸ் உதவியுடன் ஜெர்மனியில் இருந்து அவரை அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதனிடையே, தேவகவுடா உள்ளிட்டோர் உடனடியாக நாடு திரும்புமாறு பிரஜ்வலுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா தான் பேசிய வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். அதில், "மே 31 ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முன்னிலையில் நேரில் ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்" எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஜெர்மனியின் முனீச் நகரிலிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை 1.30 மணியளவில் பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூர் விமான நிலையம் வந்திறங்கினார். அங்கு காத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை கைது செய்து சி.ஐ.டி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் முன் ஜாமீன் கோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவை அவசர மனுவாக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரினார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி, மே 31 ஆம் தேதி வழக்கை விசாரிப்பதாக கூறினார். இந்நிலையில் பிரஜ்வல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஜாமீன் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல், ஜெர்மனியில் இருந்து பெங்களூர் திரும்பிய நிலையில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவரை சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் பிரஜ்வல் ரேவண்ணா.
அப்போது நீதிமன்றம், பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரிய நிலையில் 6 நாட்கள் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications