ஹாசன் எம்.பி. பதவி- திடீர் ராஜினாமா செய்த தேவகவுடா பேரன்! பரபர பின்னணி!
பெங்களூரு: தும்கூர் லோக்சபா தொகுதியில் தோற்றுப் போன தாத்தா தேவகவுடாவுக்காக ஹாசன் தொகுதி எம்.பி. பதவியை பிரஜ்வல் ரேவண்ணா ராஜினாமா செய்யவதாக அறிவித்துள்ளார்.
ஹாசன், மாண்டியா உள்ளிட்ட பகுதிகள் தேவகவுடா குடும்பத்தினருக்கு வெற்றியை தந்து கொண்டிருந்த தொகுதிகள். மதச்சார்பற்ற ஜனதா தளம் இப்போது ஆட்சியில் இருப்பதற்கும் காரணமான தொகுதிகள்.

ஆனால் அப்பகுதி மக்களே வெறுத்து போய் இம்முறை தேவ கவுடா குடும்பத்துக்கு படுதோல்வியை பரிசளித்துள்ளனர். மாண்டியாவில் போட்டியிட்ட முதல்வர் குமாரசாமி மகன் நிகில் படுதோல்வியை சந்தித்தார்.
தும்கூரில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் தோற்றுப் போனார். அவரது பேரனான பிரஜ்வல் ரேவண்ணா மட்டும் ஹாசன் தொகுதியில் வென்றார்.
இந்நிலையில் தாத்தா தேவகவுடா மீண்டும் ஹாசனில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்பதற்காக பிரஜ்வல் ரேவண்ணா தமது எம்.பிபதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து நம்மிடம் பேசிய கன்னட பத்திரிகையாளர்கள், ஹாசனில் போட்டியிட்ட பிரஜ்வல் வேட்புமனுவில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. அது தொடர்பாக விசாரணை நடத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணை முடிவடைந்து 5 பக்க அறிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பிரஜ்வல் வருமான வரி கணக்கையும் தாக்கல் செய்யவில்லை. அதனால் வருமான வரித்துறை விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் நிச்சயம் பிரஜ்வல் பதவி பறிபோகும். இதனை கருத்தில் கொண்டுதான் தாத்தாவுக்காக ராஜினாமா செய்கிறேன் என பிரஜ்வல் அறிவித்திருக்கிறார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications