"கடைசி சான்ஸ்.. நீங்கள் நினைத்தால் முடியும்.." ஹிஜாப் விவகாரம்.. கர்நாடக முஸ்லீம் மாணவி கோரிக்கை
பெங்களூர்: கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இது தொடர்பாகப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் சிறுமி முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த டிசம்பர் மாதம் முதலே ஹிஜாப் சர்ச்சை இருந்து வந்தது. முதலில் அங்குள்ள சில பியு கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது.
அப்படியே அந்தத் தடை வேறு சில அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. கல்லூரி நிர்வாகங்களின் இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லீம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

ஹிஜாப்
ஹிஜாப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கல்லூரிகளிலேயே போராட்டம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து முஸ்லீம் மாணவிகள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் தலைமையிலான அமர்வு கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று தெரிவித்தனர்.

17 வயது சிறுமி
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தும் 17 வயது சிறுமி அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் புதிய கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார். தங்கள் எதிர்காலம் பாழாகாமல் தடுக்க ஒரு வாய்ப்பு உள்ளதாகவும் அதைப் பயன்படுத்தி தங்களுக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோரிக்கை
கர்நாடகா கராத்தே சாம்பியனான அலியா அசாதி தனது ட்வீட்டில், ஹிஜாப் தடை என்பது இந்த மாத இறுதியில் நடக்கும் பல்கலைக்கழக தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் பல மாணவர்களைப் பாதிக்கும் என்று கூறினார். இது குறித்து அவர் மேலும் தனது ட்விட்டரில், "எங்கள் எதிர்காலம் பாழாகாமல் தடுக்க உங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. ஹிஜாப் அணிந்து எங்களைத் தேர்வு எழுத அனுமதிப்பது குறித்து நீங்கள் முடிவு செய்யலாம். எனது கோரிக்கையைக் கருத்தில் கொள்ளுங்கள். நாங்கள் தான் இந்த நாட்டின் எதிர்காலம்" என்று ட்வீட் செய்துள்ளார்.

மேல்முறையீடு
கர்நாடக அரசின் ஹிஜாப் தடைக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகியவர்களில் அலியா அசாதியும் ஒருவர். ஹிஜாப் தடை குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம், கர்நாடகாவின் கடலோரப் பகுதியான உடுப்பியில் ஹிஜாப் அணிந்ததற்காக 40க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகள் பல்கலைக்கழக தேர்வு எழுதாமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications