ஒரே வீட்டில் 80 வாக்காளர்கள்? ராகுல் காந்தி சொன்ன அந்த வீடு பாஜக பிரமுகருக்கு சொந்தமானதாம்.. வெளியான தகவல்
பெங்களூர்: நாட்டில் வாக்காளர் திருட்டு நடந்துள்ளதாக ராகுல் காந்தி நேற்று குற்றஞ்சாட்டியது நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அவர் பெங்களூரில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் 80 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். இது குறித்து செக் செய்த செய்தியாளர்கள் அங்குச் சென்று பார்த்தபோது பெரிய ஷாக் காத்திருந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி நாட்டில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். அப்போது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கர்நாடக வாக்காளர் பட்டியலைக் காட்டி ஒரு உதாரணத்தை அவர் குறிப்பிட்டிருந்தார்.. அங்கு மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 6.5 லட்சம் வாக்குகளில், 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் திருடப்பட்ட வாக்குகளாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

ஒரே வீட்டில் 80 வாக்காளர்கள்
அதாவது பெங்களூரில் ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள அவுட்டர் ரிங் ரோட்டில் உள்ள மகாதேவபுராவில் பூத் எண் 470ல் ஒரு வீடு குறித்து ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். அங்கு முனி ரெட்டி கார்டனில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 80 வாக்காளர்கள் போலியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். 10-15 சதுர அடி மட்டுமே கொண்ட இந்த வீட்டில், 80 வாக்காளர்கள் இருப்பதாக அவர் கூறியிருந்தர்.
இது குறித்து நேரில் விசாரிக்கப் பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே அங்கு நேரில் சென்றுள்ளது. அங்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் தீபங்கர் வசித்து வந்துள்ளார். அவர் கடந்த மாதம் தான் இந்த வீட்டில் குடியேறினாராம். பெங்களூரில் தான் வாக்காளராகப் பதிவு செய்யவில்லை என்று சொன்ன அவர், அந்த முகவரியில் இருக்கும் பெயர்கள் யாரும் தனக்குத் தெரியாது என்று கூறினார்.மேலும், அந்த வீடு பாஜக உடன் தொடர்புள்ள ஜெயராம் ரெட்டி என்பவருக்குச் சொந்தமானது என்றும் தெரிவித்தார்.
பாஜக பிரமுகர்
ஜெயராம் ரெட்டியை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். முதலில் பாஜகவுடனான தனது தொடர்பை ஒப்புக்கொண்ட அவர், பிறகு திடீரென மாற்றியுள்ளார். அதாவது தான் பாஜகவுக்கு வாக்களிக்க மட்டுமே செய்தேன் என்றும் பாஜக தொண்டர் இல்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும், தனது வீட்டில் கடந்த காலங்களில் வாடகைக்கு இருந்த பலர் வாக்காளர்களாகப் பதிவு செய்து செய்துள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், அவர்களில் பெரும்பாலானோர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.
வாக்களிக்க வருகிறார்கள்
இருப்பினும், சிலர் தேர்தலின்போது வாக்களிக்கத் திரும்பி வருவதாகவும் ஜெயராம் ரெட்டி தெரிவித்தார். இது தொடர்பாகத் தேர்தல் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்ட அவர், இப்போது அது குறித்துத் தெரிவிப்பதாக உறுதியளித்தார். அந்த குறிப்பிட்ட முகவரியில் 80 வாக்காளர்கள் இருப்பதையும் அங்கு உண்மையில் 80 பேர் இருக்க முடியாது என்பதையும் அவர் உறுதி செய்திருக்கிறார். பலர் ஒடிசா, பீகார் மற்றும் மண்டியா போன்ற பிற மாநிலங்கள் அல்லது மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டதாகவும், ஆனால் சிலர் மட்டும் இன்னும் தேர்தலின்போது வாக்களிக்க வருவதாகவும் கூறினார்.
பூத் நிலை அதிகாரி முனிரத்னா என்பவரும் இதை உறுதிப்படுத்தினார். ஐடி காரிடார் அருகே சிறிய வீடுகளில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் வாடகை ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெறுவதாக அவர் தெரிவித்தார். இவர்கள் பொதுவாக செக்யூரிட்டி, வீட்டுப் பணிப்பெண்கள் அல்லது வீட்டு வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள்.
வாக்காளர் அட்டை
வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்ற பிறகு, சில மாதங்கள் கழித்து வீட்டை காலி செய்தாலும், அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. இதுபோல அங்கிருந்து கிளம்பியவர்களின் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் ஆனால் விதிகள் காரணமாக அவர்களின் பெயர்களை நீக்குவது நிலுவையில் இருப்பதாகவும் முனிரத்னா தெரிவித்தார். மேலும், இந்த வாக்காளர்கள் பலர் தங்கள் பெயர்களை நீக்க மறுப்பதாகவும், தங்களுக்கு இன்னும் வாக்காளர் அடையாள அட்டை தேவை எனச் சொல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications