நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகள் முற்றுகை- பெங்களூர், ஹைதராபாத், சண்டிகரில் காங். உக்கிர போராட்டம்!
பெங்களூர்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதையும், டெல்லி போலீசாரால் காங். தலைவர்கள் தாக்கப்பட்டதையும் கண்டித்து நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிடும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் இன்று நடத்தினர். இதனால் பெங்களூர், ஹைதராபாத், சண்டிகரில் பெரும் பரபரப்பு நிலவியது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் 3 நாட்களாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் நடைபெற்றது.

அதேநேரத்தில் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள், எம்.பிக்கள் போலீசாரால் தாக்குதலுக்குள்ளாகினர். இது தொடர்பாக டெல்லியில் இன்று லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் காங்கிரஸ் எம்.பிக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிடும் போராட்டத்தை காங்கிரஸ் இன்று நடத்தி வருகிறது. இதனால் கர்நாடகாவின் பெங்களூரு, தெலுங்கானாவின் ஹைதராபாத் மற்றும் சண்டிகர் நகரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர் நகரில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் ஆம்புலன்சுகளும் சிக்கிக் கொண்டன. பெங்களூரில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங் தலைவர்கள் சித்தராமையா, சிவக்குமார் உள்ளிடோர் கைது செய்யப்பட்டனர்.
தெலுங்கானாவில் மத்திய அரசின் கொடும்பாவி கொளுத்தப்பட்டது. இதனால் தலைநகர் ஹைதராபாத்தில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சண்டிகரிலும் சாலைகளை மறித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர். கோவா தலைநகர் பனாஜியிலும் போராட்டம் நடத்திய காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். உ.பி. மாநிலம் லக்னோவில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி தரப்படவில்லை. தமிழகத்தில் சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியினர் இன்று போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications