வாக்குச்சீட்டை காட்டினார்.. ஹெச். டி. ரேவண்ணாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்..பாஜக புகார்
ஹெச் டி ரேவண்ணாவின் வாக்குகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்துள்ளது. எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிப்பது கர்நாடகா ராஜ்யசபா தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர்: மஜத எம்எல்ஏ ஹெச் டி ரேவண்ணா தனது வாக்குச் சீட்டை காங்கிரஸ் வாக்குச் சாவடி முகவரான டிகே சிவகுமாரிடம் காட்டியதாக தேர்தல் அதிகாரிகளிடம் பாஜக புகார் அளித்துள்ளது. ஹெச் டி ரேவண்ணாவின் வாக்குகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்துள்ளது.
கர்நாடகாவில் 4 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. பெங்களூர் விதான் செளதாவில் மாநாட்டு அரங்கத்திலிந்த வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும். மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு இரவு 7 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும்.
கர்நாடகாவில் மொத்தம் 4 இடங்களுக்கான தேர்தலில் 6 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். ஆளும் பாஜக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் ஆகியோரையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் குபேந்திர ரெட்டியையும் களமிறக்கி உள்ளன.
கர்நாடகா சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் பாஜகவின் நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ், காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் வெல்வது உறுதியானது. பாஜகவைப் பொறுத்தவரை முதல் 45 எம்.எல்.ஏக்கள் நிர்மலா சீதாராமன், 2வது 45 எம்.எல்.ஏக்கள் ஜக்கேஷுக்கு வாக்களிப்பர். எஞ்சிய 32 எம்.எல்.ஏக்கள் லெகர்சிங்குக்கு ஓட்டுப் போடுவர்.
காங்கிரஸ் கட்சியின் 70 எம்.எல்.ஏக்களில் முதல் 45 பேர் ஜெய்ராம் ரமேஸுக்கு ஓட்டுப் போடுவர். எஞ்சிய 25 எம்.எல்.ஏக்கள் மன்சூர் அலிகானுக்கு வாக்களிப்பர். மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 32 எம்.எல்.ஏக்களும் குபேந்திர ரெட்டிக்கு வாக்களிப்பர். இதனால் 4வது எம்.பி. பதவி யாருக்கு என்பதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4-வது எம்.பி. பதவி இடம் தொடர்பாக காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மல்லுக்கட்டு நடைபெற்று வருகிறது.
இரு கட்சிகளின் தலைவர்களும் பரஸ்பரம் புகார் தெரிவித்து வருகின்றனர். மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு காங்கிரஸ் குறி வைத்திருக்கிறது. இதனையடுத்து ராஜ்யசபா தேர்தலின் பின் விளைவுகள் குறித்து, கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா புரிந்து கொள்ளட்டும் என மஜத தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹெச்.டி குமாரசாமி தெரிவித்தார். இது தொடர்பாக, ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பாஜகவை தோற்கடிக்க, தன்னை விட அதிக ஓட்டுகள் வைத்துள்ள மஜத கட்சியை காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும் என்று கூறினார்.
மதச்சார்பற்ற சக்திகளை பலப்படுத்த குபேந்திர ரெட்டியை, காங்கிரஸ் முழு மனதுடன் ஆதரிக்க வேண்டும். ராஜ்யசபா தேர்தலின் பின் விளைவுகள் குறித்து, வரும் நாட்களில் மக்கள் முடிவு செய்வர் என்பதில் சந்தேகமே இல்லை. இதை கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
கர்நாடகாவில் மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி மஜத எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளார். காங்கிரஸ் கட்சி பிடிக்கும் என்பதால் அதற்கு ஓட்டு போட்டதாக கே.ஸ்ரீனிவாச கவுடா எம்.எல்.ஏ பேட்டி அளித்துள்ளார். அதே போல ஹெச்.டி ரேவண்ணா மீதும் புகார் எழுந்துள்ளது.
மஜத எம்எல்ஏ ஹெச் டி ரேவண்ணா தனது வாக்குச் சீட்டை காங்கிரஸ் வாக்குச் சாவடி முகவரான டிகே சிவகுமாரிடம் காட்டியதாக தேர்தல் அதிகாரிகளிடம் பாஜக புகார் அளித்துள்ளது. ஹெச் டி ரேவண்ணாவின் வாக்குகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் ராஜ்யசபா தேர்தல் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. இன்னும் சில மணி நேரங்கள் இருந்தாலும் கட்சி மாறி வாக்களிப்பது ஹெச்.டி குமராசாமியை கோபப்பட வைத்துள்ளது. சித்தராமைய்யா தங்கள் கட்சி எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.