144 தடையுத்தரவு போட்டும் போராட்டம்.. பதற்றத்தில் பெங்களூர்.. ராமச்சந்திர குஹாவை இழுத்து சென்ற போலீஸ்
பெங்களூர்: பெங்களூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடு முழுக்க குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பெங்களூரிலும் அதன் தீவிரம் எதிரொலித்து வருகிறது.

இந்த நிலையில்தான் பெங்களூர் போலீஸ் கமிஷனர் பாஸ்கர ராவ் நேற்று இரவு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதன்படி, பெங்களூர் நகரம் முழுக்கவே இன்று காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி 4 பேருக்கு மேல் ஒன்றாக கூட முடியாது, போராட்டங்களை நடத்த முடியாது, குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஆளும் பாஜக அரசு இதுபோல போலீஸ் நடவடிக்கையை எடுத்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மற்றொரு பக்கம் தடையுத்தரவை நாங்கள் மதிக்கப் போவதில்லை என்று கூறி பல்வேறு குழுவினரும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பெங்களூரு டவுன்ஹால் மற்றும் மெஜஸ்டிக் அருகே உள்ள மைசூர் வங்கி சர்க்கிள் போன்றவற்றில் தொடர்ந்து போராட்டங்கள் காலை முதல் நடைபெற்று வருகின்றன.
இவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். மற்றொரு பக்கம் டவுன்ஹால் பகுதியில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா மகாத்மா காந்தி புகைப்படத்தை ஏந்தி தர்ணா போராட்டம் நடத்தினார். அவரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அகற்ற முற்பட்டனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தபோது போலீசார் அவரை முதியவர் என்றும் பாராமல் இழுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆளும் ஆட்சியாளர்கள் சொல்வதைக் கேட்பது தான் காவல்துறையின் பணி என்ற போதிலும் கூட, போலீசாரும் முதலில் தாங்களும் ஒரு இந்தியர்கள், மனிதர்கள் என்பதை புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாகவும், பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications