Ranya Rao நான் நிரபராதி! ஜெயிலில் தூக்கமின்றி தவிக்கிறேன்! கோர்ட்டில் கதறிய ரன்யா ராவ்
பெங்களூர்: துபாயில் இருந்து தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ், தான் ஒரு அப்பாவி என்றும் தன்னை வேண்டுமென்றே சிக்க வைத்துவிட்டதாகவும் கண்ணீர் மல்க கோர்ட்டில் தெரிவித்தார். மேலும் தனக்கு தூக்கம் வராததால் கண்கள் வீங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது. கடந்த 3ஆம் தேதி துபாய் சென்றுவிட்டு பெங்களூர் திரும்பிய நடிகை ரன்யா ராவை வருவாய் புலனாய்வு துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அவர் 14.8 கிலோ தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனது வாக்குமூலத்தில் துபாய்க்கு செல்லும் தகவல்களை எல்லாம் ஒரு கும்பல் தனக்கு தெரிவிப்பார்கள் என்றும் அதன் பேரில் தான் சென்று தங்கத்தை கடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
தங்கக் கடத்தலுக்காக பிரத்யேக உடையை அணிந்து கொண்டு சென்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார். விமான நிலைய சோதனையிலிருந்து தப்ப தான் ஏடிஜிபியின் மகள் என கூறியதால் அவரை சோதனை செய்யாமலேயே அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ரன்யா ராவின் கண்கள் வீங்கி, முகத்தில் காயங்கள் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனால் அவரை விசாரணையின் போது அதிகாரிகள் அடித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் தனது கண்கள் துபாய் செல்வதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பே வீங்கியிருந்ததாக ரன்யா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரன்யாவுக்கு சிறையில் தூக்கம் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் தூங்காமல் விழித்திருப்பதால் அவருடைய கண்கள் வீங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ரன்யா ராவ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது கதறி அழுதார்.
"நான் எப்படி இந்த விவகாரத்திற்குள் வந்தேன் என இப்போது வரை எனக்கு புரியவில்லை, நான் இந்த கடத்தலில் சிக்க வைக்கப்பட்டுள்ளேன். என்னால் தூங்கவே முடியவில்லை" என நீதிமன்றத்தில் கூறியபடியே கதறி அழுதார்.
துபாயில் தங்கத்தை கடத்தினால் ஒரு கிலோவுக்கு ரூ 5 லட்சம் கமிஷன் என்றும் துபாயிலிருந்து எப்படி சென்னைக்கு தங்கத்தை கடத்துவார் என்பது குறித்து ரன்யா ராவ் போலீஸ் விசாரணையில் தெரிவித்திருந்ததாக சொல்லப்படும் நிலையில், அவர் தனக்கு சம்பந்தமே இல்லை என கோர்ட்டில் அழுதிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரன்யா கட்டட கலை நிபுணர் ஒருவரை அண்மையில் பெங்களூர் தாஜ் ஹோட்டலில் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 3 மாதங்களில் சிறை சென்றுள்ளார் ரன்யா. இந்த கடத்தலில் அரசியல்வாதிகள் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என சொல்லப்படுகிறது. விசாரணையின் போது பல உண்மைகள் வெளிவரலாம் என கூறப்படுகிறது. ரன்யா ராவுடன் அவரது கணவர் ஜதினும் அடிக்கடி துபாய் சென்றாராம். அவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படலாம் என தெரிகிறது.
ரன்யா ராவ் தங்கத்தை கடத்தும் போது சிக்காமல் இருந்திருந்தால் அவருக்கு ரூ 75 லட்சம் கமிஷனாக கிடைத்திருக்கும். இந்த நிலையில் இன்றைய தினம் அவருடைய ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறுகிறது. இதில் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications