Bangalore stampede: A1 ஆர்சிபி.. A2 டிஎன்ஏ.. RCB அணி அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பெங்களூர் ஏர்போர்ட்டில் கைது!
பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ஆர்சிபி அணி நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஆர்சிபி அணி அதிகாரிகள், பேரணியை ஒருங்கிணைத்த DNA நிறுவனத்தினர், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தினர் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், பெங்களூர் காவல் ஆணையர் பி. தயானந்தா உட்பட 5 காவலர்களை சஸ்பெண்ட் செய்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு ஒப்படைக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா உள்ளிட்டோர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். இதில் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம், கர்நாடக கிரிக்கெட் வாரியம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதான வழக்கு சிஐடியிடம் ஒப்படைக்கப்படும்.
இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளை கைது செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் உள்ள நடைமுறை குறைபாடுகளை ஆராய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படும்.
கடமையில் அலட்சியமாக செயல்பட்டதற்காக கப்பன்பூங்கா காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர், மாநகர உதவி காவல் ஆணையர், மாநகர காவல் துணை ஆணையர், மாநகர கூடுதல் காவல் ஆணையர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பொறுப்பின்மை, கவனக்குறைவே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் எனத் தெரிகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி குன்ஹா தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து எனக்கு தெரியாது. ஆனால் நான் எம்.எல்.ஏ ஆன பிறகு, இதுபோன்ற ஒரு சம்பவம் ஒருபோதும் நடந்ததில்லை. தற்போது நடந்த இந்த சம்பவம் எங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வழக்கில் இருந்து யாரும் தப்பிக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.
பெங்களூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆர்சிபி, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான டிஎன்ஏ எண்டர்டெயின் நெட்வொர்க்ஸ், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உள்ளிட்டோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், ஆர்சிபி அணி முதல் குற்றவாளியாகவும், டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் 2வது குற்றவாளியாகவும், கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகக் குழு 3வது குற்றவாளிகளாகவும் பட்டியலிடப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரு காவல் ஆய்வாளரின் புகாரைத் தொடர்ந்து, பேரணியை ஒருங்கிணைத்த ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான DNA என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆர்சிபி, டிஎன்ஏ ஈவெண்ட் மேலாளர்கள் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) பிரதிநிதிகளை உடனடியாக கைது செய்யுமாறு மாநில டிஜிபி மற்றும் ஐஜிபிக்கு முதல்வர் சித்தராமையா அறிவுறுத்திய நிலையில் இன்று கைது நடவடிக்கைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆர்சிபி அணி நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்சிபி அணியின் மார்க்கெட்டிங் ஹெட் நிகில் கோசலே, மும்பைக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications