பெங்களூர் கூட்ட நெரிசலில் திருப்பூர் பெண்ணும் பலி.. யார் இந்த காமாட்சி? பின்னணியில் பெரும் சோகம்
பெங்களூர்: பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த தனியார் பள்ளியின் தாளாளர் ஒருவரின் மகள் இறந்துள்ளார். அவரது உடல் இன்று உடுமலைப்பேட்டைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதன்பிறகு அவரது அப்பா தாளாளராக உள்ள பள்ளியில் இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
ஐபிஎல் 18 வது சீசன் இப்போது நடந்து முடிந்துள்ளது. கடந்த 17 சீசன்கள் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கோப்பை கிடைக்கவில்லை. 17 ஆண்டுகளாக கோப்பைக்காக ஆர்சிபி அணி ஏங்கியது. இந்த ஏக்கம் 18 வது சீசனில் முடிவுக்கு வந்துள்ளது.

நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றியது. இதுதான் ஆர்சிபியின் முதல் ஐபிஎல் கோப்பையாகும்.
இதையடுத்து ஆர்சிபி அணி வீரர்களுக்கு நேற்று பெங்களூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு பெங்களூர் விதானசவுதா மற்றும் கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களுக்கு விழா எடுக்க முடிவு செய்யப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் நேற்று மாலையில் குவிந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். 47 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்துள்ளவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்டவர்கள் மருத்துவமனையில் உள்ளவர்களை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்தனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு கர்நாடகா அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கூட்ட நெரிசலில் தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண் பலியாகி உள்ளார். அவரது பெயர் காமாட்சி. இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர். காமாட்சியின் தந்தை பெயர் மூர்த்தி. இவர் தனியார் பள்ளியில் தளாளராக பொறுப்பு வகித்து வருகிறார். காமாட்சி பெங்களூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்றைய தினம் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அவர் பலியாகி உள்ளார்.
பலியான காமாட்சியின் உடல் பெங்களூரில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று காலையில் அவரது உடல் பெங்களூரில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அவரது தந்தை தாளாளராக உள்ள பள்ளியில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளது. இந்த சம்பவத்தால் உடுமலைப்பேட்டையில் உள்ள காமாட்சி குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications