23 அட்டை பாக்ஸில் சிக்கிய ரூ.42 கோடி! பெங்களூர் மாஜி கவுன்சிலர் வீட்டில் மலைக்க வைத்த ஐடி ரெய்டு
பெங்களூர்: பெங்களூரில் இரவோடு இரவாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில் 23 அட்டை பெட்டிகளில் கட்டுக்கட்டாக ரூ.42 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் சுல்தான் பாளையாவில் வசித்து வருபவர் அம்பிகாவதி. இவர் பெங்களூர் மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் சங்கத்தின் துணை தலைவராக உள்ளார்.

இவரது மனைவி அஸ்வதம்மா. இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். பெங்களூர் மாநகராட்சியின் 95வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் தான் அவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அஸ்வதம்மா கடந்த 2001ம் ஆண்டு பெங்களூர் காவல் பைரசந்திரா வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதோடு இவர் முன்னாள் எம்எல்ஏவான அகண்ட சீனவாச மூர்த்தியின் சம்பந்தி ஆவார்.
இந்நிலையில் அம்பிகாவதி-அஸ்வதம்மாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நடத்தப்பட்டது. பெங்களூர் சுல்தான் பாளையாவில் உள்ள 2 வீடுகள், காவல் பைரசந்திராவில் உள்ள அடுக்குமாடி வீடு, ஆத்மானந்தா காலனியில் அஸ்வதம்மா பெயரில் உள்ள அவரது தம்பி பிரதீப்பின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி ஆய்வுகளை தொடங்கி உள்ளனர்.
இந்த வேளையில் ஒரு வீட்டு அறையில் இருந்து அட்டைப்பெட்டியில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. மொத்தம் 23 அட்டை பெட்டிகளில் பணம் இருந்தது. இதனை கைப்பற்றி அதிகாரிகள் எண்ணிப்பார்த்தனர். ஒவ்வொரு அட்டைப்பெட்டியிலும் ரூ.1 கோடியே 65 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. அப்போது மொத்தம் ரூ.42 கோடி பணம் இருப்பது தெரியவந்தது.
மேலும் காரிலும் பணம் இருந்தது. அதில் இருந்தும் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. இப்படி ரூ.42 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளன. விரைவில் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்த உள்ளது.
தற்போது வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ள அம்பிகாவதி கடந்த 8 ம் தேதி தான் முதல்வர் சித்தராமையாவை சந்தித்தார். அப்போது பெங்களூர் மாநகராட்சியின் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இத்தகைய சூழலில் தற்போது அவரது வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications