Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரலாற்று சாதனை படைக்க உள்ள சந்திரயான் 3! தரையிறங்கும்போது என்ன ஆகும்? இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் இன்று மாலை திட்டமிட்டவாறு தரையிறங்க இருக்கிறது. இந்த லேண்டிங்கின் போது என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்து இஸ்ரோ விளக்கமளித்திருக்கிறது.

நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

Scientists have explained what will happen when the Chandrayaan 3 Vikram Lander lands

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஏற்கெனவே நடந்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் அந்த தவறு நடக்காதவாறு இஸ்ரோ மிகச்சரியாக இந்த மிஷனை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக இதன் தூரம் குறைக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நிலவுக்கு நெருக்கமாக இதை விஞ்ஞானிகள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 17ம் தேதி சந்திரயான் விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி விக்ரம் லேண்டருக்கும் நிலவுக்குமான தூரம் 113x157 கி.மீ என்கிற அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து 20ம் தேதி அதிகாலை 1.53 மணியளவில் விக்ரம் லேண்டர் மேலும் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்படி தற்போது லேண்டர் நிலவுக்கு குறைந்தபட்சமாக 25 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 134 கி.மீ தொலைவிலும் சுற்றி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று மாலை 6.04 மணிக்கு இது நிலவில் மெல்ல தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த லேண்டர் தரையிறங்க 15 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளும். அப்படி இருக்கையில் இது எவ்வாறு தரையிறங்கும் என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். முதலில் 25 கி.மீ உயரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் விக்ரம் லேண்டரை 7.4 கி.மீ உயரத்திற்கு கொண்டுவர வேண்டும். தற்போது விக்ரம் லேண்டர் மணிக்கு 6,000 கி.மீ வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இதனை 1,200 கி.மீ வேகத்திற்கு குறைத்தால்தான் உயரத்தையும் குறைக்க முடியும்.

இதற்காக விக்ரம் லேண்டர் 10 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும். இரண்டாம் கட்டமாக நிலவுக்கும் லேண்டருக்கும் இடையே இருக்கும் 7.4 கி.மீ தூரம் 6.3 கி.மீ ஆக குறைக்கப்படும். இந்த கட்டத்தில்தான் லேண்டர் எந்த திசையில் தரையிறங்க வேண்டும் என்பது முடிவு செய்யப்படும். மூன்றாவது கட்டத்தில் லேண்டரின் வேகம் 1,200 கி.மீலிருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்படும். இதன் மூலம் 6.4 கி.மீ தூரத்தில் கிடைமட்டமாக சுற்றிக்கொண்டிருந்த இந்த லேண்டர், நிலவுக்கு செங்குத்தாக வெறும் 800 மீ உயரத்திற்கு கொண்டுவரப்படும். இதுதான் மிகவும் ரிஸ்கான செயல்பாடு.

பின்னர் லேண்டரின் சிறிய ராக்கெட்டுகள் செயல்பட தொடங்கி லேண்டரை கொஞ்சம் கொஞ்சமாக 150 மீ மற்றும் 60 மீ உயரத்திற்கு கொண்டு வரும். அதன் பின்னர் விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள லேசர் ஒளி கருவி, நிலவின் மீது லேசர் ஒளியை வீசி அதன் மூலம் நிலவுக்கும் லேண்டருக்கும் இடையேயான தூரம் எவ்வளவு என்பதை உணர்ந்து ராக்கெட் வெளியிடும் உந்து விசையை குறைக்கவோ கூட்டவோ செய்யும். இப்படியாக படிப்படியாக 10 மீட்டர் உயரத்திற்கு லேண்டர் வந்து சேர்ந்தவுடன் ராக்கெட் பூஸ்டர்கள் அனைத்தும் ஆஃப் ஆகிவிடும்.

ஏனெனில் நிலவின் மண் துகள்கள் மிக மிக நுண்ணியது. 10 மீட்டர் உயரத்தை தாண்டியும் பூஸ்டரை செயல்படுத்தினால் இந்த மண் துகள்கள் பறந்து வந்து லேண்டர் மீது படிந்துவிடும். இது ஏதாவது தொழில்நுட்ப கோளாறை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. எனவே லேண்டர் 10 மீ உயரத்தில் இருக்கும்போதே பூஸ்டர்கள் ஆஃப் செய்யப்பட்டு அது தொப்தென விழுந்துவிடும். நிலவின் ஈர்ப்பு விசையை பொறுத்த அளவில் விக்ரம் லேண்டர் நிமிடத்திற்கு 2 மீட்டர் வேகத்தில் நிலவில் விழும்.

கடந்த முறையும் 13 மீட்டர் உயரத்திலிருந்து சந்திரயான் 2 விண்கலம் நிலவில் மோதியதால்தான் செயலிழந்தது. ஆனால் இந்த முறை இப்படி மோதினாலும் கூட லேண்டருக்கு எதுவும் ஆகாததை போல அதை சிறப்பாக இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆக இது விக்ரம் லேண்டர் நிலவில் தொப்பென விழ வைப்பது திட்டமிட்ட செயல்பாடுதான். இதனால் எழும் தூசிகள் அடங்க சில மணி நேரங்கள் ஆகலாம். அதன் பின்னர்தான் பிரக்யான் ரோவர் வெளியே வரும் என்று விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். ஏனெனில் அதற்கு முன்னர் ரோவர் வெளியில் வந்தால், ரோவர் மேல் உள்ள சூரிய ஒளி தகடுகள் மேல் தூசிகள் பதிந்துவிடும்.

நிலவில் வளி மண்டலம் கிடையாது என்பதால் காற்றும் இருக்காது. எனவே இங்கு எழும் தூசிகள் அடங்க சில மணி நேரம் வரை கூட எடுத்துக்கொள்ளக்கூடும். எனவே விக்ரம் லேண்டலிருந்து பிரக்யான் ரோவர் வெளியே வர சற்று தாமதமாகலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எப்படி இருந்தாலும் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிவிடும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது சாத்தியமானால் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+