சரியாக இரவு 12 மணி.. காத்திருந்த காமுகர்கள்.. கதறிய இளம் பெண்கள்.. பெங்களூர் ஷாக்
பெங்களூர்: நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பித்ததுமே, வரிசையாக பல பெண்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளடக்கப்பட்டுள்ள சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு நகரில், எம்ஜி ரோடு, பிரிகேட் ரோடு உள்ளிட்டவை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு பெயர் பெற்ற இடங்கள். இங்கு பல ஆயிரம் ஆண்களும், பெண்களும் ஒன்றாக சேர்ந்து இரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்று உற்சாக கோஷமிடுவது, கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறுவது வழக்கம்.
இந்த நிலையில்தான் 2017 ஆம் ஆண்டு பெங்களூரு பிரிகேட் ரோடு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்கள் குடிகார ஆண்களால் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

கடந்த வருடம்
இந்த அதிர்ச்சி சம்பவம் அம்பலமான பிறகு, புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நகரம் முழுக்க பாதுகாப்பை பலப்படுத்துவது போலீசாரின் வாடிக்கையாகிவிட்டது. இருப்பினும் கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எம்ஜி ரோடு பகுதியில் சில பாலியல் சீண்டல் சம்பவங்கள் நடந்ததாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியது. இதை, காவல்துறையினர் மறுத்திருந்தனர். இந்த நிலையில்தான் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பெங்களூரில் மற்றொரு முக்கியமான பகுதியில் பாலியல் சீண்டல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோரமங்களா
தெற்கு பெங்களூர் பகுதியில் அமைந்துள்ளது கோரமங்களா. நவநாகரீக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலரும் வசிக்கக்கூடிய பகுதி இது. பெண்கள் மட்டுமே தங்கக்கூடிய ஹாஸ்டல்கள் அதிகம் கொண்ட பகுதி இதுவாகும். இங்கு நேற்று இரவு 12 மணிக்கு, கோரமங்களா 5வது பிளாக்கில், இளம் ஆண்களும் பெண்களும் தெருக்களில் கூடி நின்று புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டு பிறந்ததுமே, இதற்காகவே காத்திருந்த சில குடிகாரர்கள், அங்கு நின்று கொண்டிருந்த பெண்களின் அங்கங்களில் தொடக்கூடாத இடங்களில் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பெண்கள் பயத்தில் கத்தியுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்ட கோஷங்கள், பட்டாசு சத்தம் போன்றவற்றுக்கு நடுவே, இந்த பெண்களின் குரல் வெளியே கேட்கவில்லை. அதற்குள் அந்த ஆண்கள் வந்த வேலையை முடித்து விட்டு நைசாக கிளம்பிவிட்டனர்.

அதிகாரிகள் விசாரணை
இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு சில இளம்பெண்கள் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தென் கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் இஷா பந்த், உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட பெண்களிடம் விவரம் கேட்டு அறிந்தனர். அந்த, பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு பாலியல் சீண்டல் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிக்க இஷா பந்த் உத்தரவிட்டார்.

அடிதடி
இதனிடையே பிரிகேட் ரோடு பகுதியில் ஆண் ஒருவர் வாயில் வெட்டுப்பட்டு ரத்த காயங்களுடன் விழுந்து கிடந்ததை ரோந்து சென்ற போலீசார் பார்த்து, அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறின்போது இவர் தாக்கப்பட்டு இருக்கலாம், என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களின் போதும், பெங்களூரில் இளம் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறி விட்டது என்பதே யதார்த்தமாக உள்ளது.












Click it and Unblock the Notifications