பிரதமர் சொன்னது அரசியலமைப்புக்கே எதிரானதுங்க.. ஓயாத சனாதனம் விவகாரம்! சித்தராமையா கண்டனம்
பெங்களூர்: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடியும் இந்த கருத்துக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் இந்த கருத்தை பிரதமர் திரும்ப பெற வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,

"சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்" என்று பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்துள்ளார். டெல்லி, பீகாரில் உதயநிதி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல உத்திரப் பிரதேசம் ராம்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் கண்டனம் அதிகரித்திருக்கிறது.
இதுபோன்ற கண்டனங்களுக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "நான் எந்த சட்ட சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன். இது போன்ற காவி மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியை பின்தொடர்பவர்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம். இதனை இன்றும் சொல்வேன், நாளையும் சொல்வேன், என்றென்றைக்கும் சொல்வேன். திராவிட மண்ணில் சனாதனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் இருந்து ஒரு துளி கூட பின்வாங்க மாட்டோம்" என்று கறாராக கூறியிருந்தார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், "சனாதனம் குறித்த அவதூறு கருத்துக்களுக்கு மத்திய அமைச்சர் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மோடியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "பிரதமர் மோடியின் அறிவிப்பு மிகவும் ஆத்திரமூட்டல் மட்டுமல்ல, அரசியலமைப்பிற்கும் எதிரானது" என்று கூறியுள்ளார்.
மேலும், "சூழ்நிலை எதுவாக இருந்தாலும், யாரேனும் தவறு செய்திருந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குப் பதிலாக, மக்களை பதிலளிக்கத் தூண்டுவது, சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கும் அழைப்பாக மாறும். பிரதமர் இதைச் செய்தாலும் கூட அது குற்றமாகிவிடும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications