செம உள்குத்து.. கர்நாடக களேபரத்திற்கு காரணம் எடியூரப்பா இல்லையாம், சித்துதானாம்.. கடுப்பில் கவுடா!
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் மொத்தம் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ராஜினாமா செய்திருப்பதன் பின்னணியில், முன்னாள் முதல்வர் சித்தராமையா இருப்பதாக, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் ஹெச்.டி.தேவகவுடா குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, பாஜக 105 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சி அமைக்க 113 எம்எல்ஏக்களாவது, வேண்டும் என்பதால், திடீரென காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்தன.
மஜத தலைவர்களில் ஒருவரான குமாரசாமி முதல்வரானார். இந்த ஏற்பாடு முன்னாள் முதல்வரும், காங்கிரசின் மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கு அப்போதே பிடிக்கவில்லை. ஏனெனில் அதிக எம்எல்ஏக்களை பெற்றிருந்த காங்கிரஸ்தான் முதல்வர் பதவியை அலங்கரிக்க வேண்டுமே தவிர, குமாரசாமி கிடையாது என்பது சித்தராமையா எண்ணமாக இருந்தது.

சித்தராமையா அதிருப்தி
சித்தராமையா ஒரு காலத்தில் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னணித் தலைவராக இருந்தவர். குமாரசாமிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதால், தேவகவுடா உடன் கோபித்துக்கொண்டு காங்கிரஸுக்கு வந்து குறுகிய காலத்திலேயே முதல்வரானவர். இந்தப் பனிப்போர் சித்தராமையாவின் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. ஆனாலும் லோக்சபா தேர்தலின் போது, காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா கட்சிகள், கூட்டணியுடன் சந்தித்தால்தான், பாஜகவை வீழ்த்த முடியும் என்று காங்கிரஸ் மேலிடம் விடாப்பிடியாக கூறியதால் வேறுவழியின்றி சித்தராமையா இதை ஏற்றுக் கொண்டார்.

சித்து விளையாட்டு
நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மண்டியாவில் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளரான சுமலதா அம்பரீஷ் வெற்றி பெற்றார். பிற அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. எனவே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து சித்தராமையா சித்து விளையாட்டை ஆரம்பித்து விட்டதாக அங்குள்ள அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இந்த கூட்டணி தொடரக்கூடாது, குமாரசாமி முதல்வராக நீடிக்க கூடாது, அல்லது தன்னை முதல்வராக்க வேண்டும், என்பதே சித்தராமையா விருப்பம் என்று தேவகவுடாவும் கருதுகிறார்.

தேவகவுடா குற்றச்சாட்டு
மொத்தம் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், மூன்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதில் 11 பேர் மும்பையில் உள்ள ஹோட்டலில் தங்கி உள்ளனர். ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் தேவகவுடாவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த கூட்டணி ஆட்சியை கலைப்பதில் சித்தராமையா தான் சதி செய்து வருவதாக அவரிடம் தேவகவுடா குற்றம்சாட்டியதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.சித்தராமையாவுக்கு நெருக்கமான எம்எல்ஏக்கள்தான், தற்போது ராஜினாமா செய்துள்ளனர் என்பதை தேவகவுடா அப்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

சித்தராமையா மறுப்பு
இதனிடையே, பெங்களூரில் இன்று நிருபர்களிடம் பேட்டியளித்த சித்தராமையாவிடம், உங்களுக்கு நெருக்கமான எம்எல்ஏக்கள் தானே ராஜினாமா செய்து உள்ளார்கள் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ராஜினாமா செய்த அனைவருமே எனக்கு நெருக்கமானவர்கள்தான். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவருமே எனக்கு நெருக்கமானவர்கள்தான். குறிப்பிட்ட சிலரை மட்டும் நாம் சொல்லி விட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. அதேநேரம், ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது என்று கூலாக பேட்டி அளித்து விட்டு கிளம்பிவிட்டார். காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ, காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா பின்னணியில் இருந்து செயல்படுகிறார் என்ற தகவல் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications