"தும்பா டேஞ்சர்.." பெங்களூர் எம்.பி. தேஜஸ்வி சூர்யா உருமாறிய வைரஸ்.. சித்தார்த் நேரடி அட்டாக்
பெங்களூர்: பெங்களூரு தெற்கு தொகுதி, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா உருமாறிய வைரஸ் என்று நடிகர் சித்தார்த் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
Recommended Video
ஜெயநகர் பகுதியிலுள்ள பெங்களூர் தெற்கு மண்டலத்திற்கான வார் ரூம் அலுவலகம் சென்ற பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மற்றும் சில பாஜக எம்எல்ஏக்கள் அங்கே பணியாற்றக்கூடிய 17 முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பெயரை மட்டும் ஊடகத்துக்கு முன்பாக வாசித்துக் காட்டி, இவர்கள்தான் பெட் ஒதுக்கீடு, முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சாட்டினார்.
ஆனால், பெங்களூர் காவல்துறை நடத்திய விசாரணையில் இவர்கள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து எடியூரப்பா அரசின் நிர்வாக தோல்வியை மூடி மறைப்பதற்காக மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி, அவர்கள் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப தேஜஸ்வி சூர்யா, கீழான அரசியல் செய்கிறார் என்று கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

திணறிய தேஜஸ்வி
இந்த சர்ச்சைகள் தொடர்பாக விளக்கம் அளிக்க பெங்களூரில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்த்தினார் தேஜஸ்வி சூர்யா. ஆனால் அவர்கள் எழுப்பிய முக்கியமான கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க முடியாமல் திணறினார்.
சில கேள்விகளுக்கு மௌனமாக இருந்தார். சில கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அடுத்த கேள்வி கேளுங்கள் என்று பதில் சொல்லி அந்த கேள்வியை தவிர்த்தார்.

கேள்விகள்
இந்த செய்தியாளர் சந்திப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, செய்தியாளர்கள் இவ்வாறு முக்கிய பிரச்சினைகளில், மடக்கி மடக்கி கேள்வி எழுப்பியதற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

சித்தார்த் விமர்சனம்
கொரோனா விவகாரத்தை மத்திய பாஜக அரசு, மெத்தனமாக கையாண்டதன், காரணமாக இது உலகத்திலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது இந்தியா, என்று தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்து வருகிறார் நடிகர் சித்தார்த். ஒருகட்டத்தில் தனது குடும்பத்தினருக்கு மிரட்டல் வருவதாக, சித்தார்த் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், அவர் தனது விமர்சனக் கணைகளை குறைத்துக் கொள்ளவில்லை. தேஜஸ்வி செய்தியாளர் சந்திப்பு தொடர்பான வீடியோ பதிவை ரீட்வீட் செய்துள்ள சித்தார்த், பெங்களூர் தெற்கு, உருமாறிய வைரஸ் ரொம்பவே ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார். அதில், கன்னட வார்த்தையான, "தும்பா" என்பதை சேர்த்துள்ளார். துப்பா என்பதன் அர்த்தம் அதிகம் அல்லது ரொம்ப என்பதாகும்.

மக்களிடையே பிளவு
மத ரீதியாக மக்களிடையே பிளவை உண்டாக்கும் வகையில் முஸ்லிம் ஊழியர்களை மட்டும் குறிவைத்து அங்கு பேசப்பட்டதால், இது போன்ற ஒரு கருத்தை சித்தார்த் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த சில நாட்களாக டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் தேஜஸ்வி சூர்யா செயல்பாடு பற்றி விமர்சனங்கள் எழுந்து வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications