திஷா ரவி கைதில் டெல்லி போலீஸ் அத்துமீறல்...நடவடிக்கை எடுக்க கர்நாடக அமைச்சரிடம் சமூக ஆர்வலர்கள் மனு!
பெங்களூரு: திஷா ரவியை அத்துமீறி கைது செய்த டெல்லி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களுரு சமூக ஆர்வலர்கள், வக்கீல்கள் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மாயிடம் மனு கொடுத்துள்ளனர்.
Recommended Video

குற்றம் சாட்டப்பட்டவர்களை வேறு மாநிலத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன் உள்ளூர் நீதிபதி முன் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் இந்த நடைமுறை எதையும் பின்பற்றாமல் டெல்லி காவல்துறை அத்துமீறி செயல்பட்டது என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
டெல்லி போராட்டம் தொடர்பான டூல்கிடை பகிர்ந்து தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த 22 வயதான திஷா ரவியை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

குடியரசு தின வன்முறை
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறையாக வெடித்தது. டெல்லியே பதற்றமானது. காலிஸ்தான் ஆதரவாளர்களால்தான் இந்த வன்முறை தூண்டப்பட்டதாக கூறும் டெல்லி போலீசார், இணையத்தில் குறிப்பாக ட்விட்டரில் உலவிய டூல்கிட்டைக் அதற்கு ஆதாரமாக கூறினர்.

திஷா ரவி கைது
இந்த டூல்கிட்டை சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டரில் பகிர்ந்தார். அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதற்கிடையே இதற்கிடையே . டெல்லி போராட்டத்தில் பங்கெடுக்க விரும்புவோர் போராட்டத்தைப் பற்றியும், அதில் தங்களின் பங்களிப்பை எவ்வாறு செய்ய முடியும் என்கிற விளக்கங்களும் அடங்கிய 'டூல் கிட்' உருவாக்கி அதைப் பலருக்கு பகிர்ந்ததாக பெங்களூருவை சேர்ந்த 22 வயதான திஷா ரவியை டெல்லி சைபர் பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பெங்களூரு போலீசாருக்கு தெரியாமல் நடவடிக்கை
ஒரு மாநிலத்தில் உள்ள நபரை வேறு மாநில போலீசார் கைது செய்ய வேண்டுமானால், அந்த நபர் இருக்கும் மாநில போலீசாரிடம், கைது நடவடிக்கை எடுக்கும் போலீசார் அனுமதி பெற வேண்டும். ஆனால் இதை எதையும் பின்பற்றாமல் டெல்லி போலீசார் பெங்களூரு வந்து திஷா ரவியை அதிரடியாக கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திஷா ரவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தமால் டெல்லிக்கு அழைத்தது சென்றதாகவும் தெரிகிறது.

குவியும் கண்டங்கள்
சுற்றுச் சூழலியல் ஆர்வலரான திஷா, கிரேட்டா தன்பர்க்கின் 'ஃப்ரைடே'ஸ் ஃபார் ஃபியூச்சர்' (Fridays For Future) என்ற அமைப்பின் கிளையை இந்தியாவில் தொடங்கியவர் ஆவார். திஷா ரவி கைதுக்கு நாடு முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது. சமூக அக்கறையாளர்கள், சமூக நலப் போராளிகள் மீது அரசு அடக்குமுறையை செலுத்துவதாக எதிர்ப்பு குரல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் திஷா ரவியை அத்துமீறி கைது செய்த டெல்லி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களுரு சமூக ஆர்வலர்கள், வக்கீல்கள் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மாயிடம் மனு கொடுத்துள்ளனர்.

டெல்லி போலீசார் மீது நடவடிக்கை வேண்டும்
பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், வக்கீல்கள், விவசாயிகள் குழுக்கள், தொழிலாளர் சங்கங்கள் மற்றும் பலர் அடங்கிய குழு உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மாயியை சந்தித்து, திஷா ரவியை அத்துமீறி கைது செய்தது தொடர்பாகவும், அவரை அழைத்து சென்ற விதம் குறிததும் டெல்லி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களை வேறு மாநிலத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன் உள்ளூர் நீதிபதி முன் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் இந்த நடைமுறை எதையும் பின்பற்றாமல் டெல்லி காவல்துறை அத்துமீறி செயல்பட்டது என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications