மசால் தோச மசால் தோசதான்யா.. ஆனானப்பட்ட ஸ்டார்பக்ஸ் நிறுவனர் சப்புகொட்டி பாராட்டிய பெங்களூர் ஹோட்டல்!
பெங்களூர்: உலகின் மிகப் பெரிய காபி செயின் நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனர் நம்ம ஊர் பில்டர் காபி சுவையில் மெய்மறந்து போய்விட்டார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தான் உலகின் மிகப் பெரிய காபி செயின் நிறுவனமாக உள்ளது. அமெரிக்கர்கள் ஸ்டார்பக்ஸ் தான் காபிக்களின் ராணி எனக் கொண்டாடித் தீர்ப்பார்கள்.
அமெரிக்காவைத் தாண்டியும் கூட ஸ்டார்பக்ஸுக்கு தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளன. இளசுகளைக் கவரும் வகையில் இவர்களும் பல புதிய காபி வகைகள் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றனர்,

ஸ்டார்பக்ஸ்
அமெரிக்காவைத் தாண்டியும் கூட உலகின் பல்வேறு நாடுகளிலும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்குக் கிளைகள் உள்ளன. 80 நாடுகளில் 33,833 கிளைகளுடன் உலகின் டாப் நிறுவனங்களில் ஒன்றாக இதுவும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை டாடா உடன் இணைந்து கடந்த 2012இல் மும்பையில் முதலில் ஸ்டார்பக்ஸ் கடை திறக்கப்பட்டது. அதன் பின்னர் நாடு முழுக்க பல இடங்களில் இந்த கடைகள் திறக்கப்பட்டன.

ஜெவ் சீகல்
இந்த உலகில் மிகப் பெரிய காபி செயின் நிறுவனத்தைத் தோற்றுவித்த ஜெவ் சயகல் நம்ம ஊர் பில்டர் காபி டெஸ்டில் மயங்கிவிட்டார். இப்போது இந்தியாவுக்கு வந்துள்ள ஜெவ் சீகல் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற வித்யார்த்தி பவனுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் பல இந்திய உணவுகளைச் சுவைத்தார். . முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஜெவ் சீகல், இந்திய உணவுகளையும் ஒரு பிடி பிடித்தார்.

ஃபில்டர் காபி
குறிப்பாக அவருக்கு மசாலா தோசையும், ஃபில்டர் காபியும் ரொம்பவே பிடித்துவிட்டதாம். அவர், "உங்கள் உணவு, காபி மற்றும் அன்பான வரவேற்புக்கு மிகவும் நன்றி. இந்த "இந்த அற்புதமான அனுபவத்தை என்னுடன் சியாட்டிலுக்கு (ஸ்டார்பக்ஸ் தலைமையகம் அமைந்துள்ள இடம்) எடுத்துச் செல்வேன்" என்று உணவகத்திற்கு நன்றி கூறி குறிப்பை எழுதியுள்ளார். மேலும், அவரது படத்தை அந்த உணவகம் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது.

விரைவில் பில்டர் காபி
உலகின் டாப் நிறுவனங்களின் நிறுவனர் ஒருவருக்கு சர்வ் செய்தது பெருமை என்றும் அந்த உணவகம் தெரிவித்து உள்ளது. மேலும், நிறுவனத்தின் ஊழியர்களுடன் சீகல் உற்சாகமாக ஃபோஸ் கொடுப்பது போன்ற படங்களையும் அந்த உணவகம் பகிர்ந்து உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துகளைக் கூறி வருகின்றனர். விரைவில் ஸ்டார்பக்ஸில் பில்டர் காபியை எதிர்பார்ப்பதாகவும் நெட்டிசன் ஒருவர் கருத்து கூறி உள்ளார்.

இந்தியர் சிஇஓ
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்குக் கடந்த சில ஆண்டுகளாக நல்ல வளர்ச்சி உள்ளன. இதனிடையே இப்போது தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிர்வாகி லக்ஷ்மன் நரசிம்மன் என்பவர் ஸ்டார்பக்ஸ் சிஇஓவாக நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த செப். மாதம் தான் அவர் சிஇஓவாக நியமிக்கப்பட்டார். அவரது வருகை ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தை எப்படி மாற்றும் என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.

இந்தியாவுக்கான திட்டம்
இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் பெரியளவில் வளர்ச்சி அடையவில்லை. இந்தியாவில் வருமானத்தை அதிகரிக்க ஸ்டார்பக்ஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் ஃபில்டர் காபி, மசாலா சாய் மற்றும் ஸ்ட்ரீட் ஸ்டைல் சாண்ட்விச்களை இந்திய மெனுவில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வந்தன. இந்தச் சூழலில் அதன் நிறுவனரே பில்டர் காபியைச் சுவைத்து உள்ளது இதை உறுதி செய்யும் விதமாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications