உக்ரைனில் கொல்லப்பட்ட இந்திய மாணவர் உடல் மருத்துவ ஆய்வுக்காக தானம்.. உருக்கமான தகவல்கள்
பெங்களூரு: உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவர் நவீன் உடலை மருத்துவ ஆய்வுக்காக வழங்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அந்நாட்டில் தங்கியிருந்த மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர்.
குறிப்பாக மருத்துவம் படிப்பதற்காக உக்ரைனுக்கு சென்ற இந்திய மாணவர்கள் செய்வதறியாது தவித்து உதவி கோரி வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.
அங்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி கற்பதற்காக சென்ற மாணவர்களின் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை மீட்டுத் தருமாறு மத்திய மாநில அரசுகளிடம் உருக்கமான கோரிக்கைகளை வைத்து வந்தனர்.
உக்ரைன் போர்.. சீனாவுக்கு அழுத்தம் கொடுத்த அமெரிக்கா.. ஜி ஜின்பிங் கொடுத்த பதில்! அடேங்கப்பா
ஆப்ரேஷன் கங்கா
இந்திய அரசும் ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் சிறப்பு விமானங்கள் மூலம் இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் இருந்து தப்பி அண்டை நாடுகளுக்கு வந்த இந்திய மாணவர்களை சிறப்பு விமானம் மூலம் மத்திய அரசு இந்தியா அழைத்து வந்தது.
2 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு
இதனிடையே தாக்குதல் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த கார்கீவ் நகரிலிருந்து உணவு வாங்குவதற்காக பதுங்கு குழியில் இருந்து வெளியே சென்ற கர்நாடகா மாநிலம் ஹவேரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா ஞானகவுடர் மார்ச் 1 ஆம் தேதி ரஷ்யாவின் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதேபோல் பஞ்சாப் மாநிலம் பதிண்டாவை சேர்ந்த சந்தன் ஜிண்டால் என்ற மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்
இந்தியா வரும் மாணவர் உடல்
இந்நிலையில் கார்கீவ் நகரில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பாவின் உடலை மீட்டுத்தர வேண்டும் என அவரது பெற்றோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கடும் முயற்சிகளுக்கு பிறகு மாணவர் நவீனின் உடல் உக்ரைனிலிருந்து ஞாயிறு அன்று கர்நாடக தலைநகர் பெங்களூருவுக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுவதாக முதலில் தகவல் வெளியானது.
கர்நாடக முதலமைச்சர் விளக்கம்
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, "உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பின்போது உயிரிழந்த ஹவேரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் நவீன் உடல் திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் பெங்களூரு வந்தடையும்." எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆராய்ச்சிக்காக வழங்கப்படும் மாணவர் உடல்
இந்த நிலையில் மாணவர் நவீனின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்க இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். கர்நாடகாவின் தேவனாங்கிரியில் உள்ள எஸ்.எஸ். மருத்துவக் கல்லூரியிடம் ஆராய்ச்சிக்காக உடல் வழங்கப்பட உள்ளது. தனது மகனுக்கு இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என அவரது தந்தை சேகரப்பா கோரிக்கை விடுத்தநிலையில், அவற்றை நிறைவேற்றிய பிறகு உடல் மருத்துவ ஆய்வுக்காக வழங்கப்படும் என கூறப்படுகிறது.