மைசூர் சாண்டல் சோப் விளம்பரத் தூதர்.. தமன்னாவுக்கு கன்னட மக்கள் எதிர்ப்பு.. உடனே வந்த விளக்கம்!
பெங்களூர்: மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பர தூதராக பாலிவுட் நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது கன்னட மக்களிடையே எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது. 1916ஆம் ஆண்டு மைசூர் அரச குடும்பத்தினரால் மைசூர் சாண்டல் சோப் தொழிற்சாலை பெங்களூரில் தொடங்கப்பட்டது. இதன்பின் 1918ஆம் ஆண்டு மைசூர் சாண்டல் சோப் தொழிற்சாலை அரசுத்துறையாக மாற்றப்பட்டது.
இந்த மைசூர் சாண்டல் சோப், 100 சதவிகித தூய இயற்கை எண்ணெய் கொண்டு உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மைசூர் சாண்டல் சோப் தமிழ்நாட்டிலும் ஏராளமானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கர்நாடக அரசு, மைசூர் சாண்டல் சோப் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்து, அதனை பான் இந்தியா லெவனில் விளம்பரப்படுத்த முடிவு செய்திருக்கிறது.

விளம்பரத் தூதராக தமன்னா
இதற்காக கர்நாடகா அரசின் மைசூர் சோப் மற்றும் டிடர்ஜெண்ட்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக பாலிவுட் நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நடிகை தமன்னாவுக்கு ரூ.6.2 கோடி ஊதியமாக அளிக்கப்பட்டுள்ளது. இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
கன்னட நடிகைகள் இல்லையா?
இந்த நிலையில் மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதராக நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பவம் கன்னட மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கன்னட திரைப்படத் துறையைச் சேர்ந்த திறமையான நடிகைகள் இருக்கும் போது, எதற்காக பாலிவுட் நடிகையை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று முதல்வர் சித்தராமையாவை டேக் செய்து சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கர்நாடகா அரசு விளக்கம்
கன்னட சினிமாவில் திறமைக்கு பஞ்சமா? அல்லது நடிகைகளுக்கு பஞ்சமா? இந்தி நடிகைக்கு ஊதியத்தை கொடுப்பதற்கு பதில் உள்ளூர் நடிகைக்கு கொடுக்கலாமே என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடகா சோப்ஸ் மற்றும் டிடர்ஜெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பிரசாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
விளம்பரத் தூதராக தமன்னா ஏன்?
அதில், மைசூர் சாண்டல் சோப்பை இந்திய அளவில் கொண்டு செல்வதற்கு ஒரு விளம்பரத் தூதர் தேவை. அவர் இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் புகழ் பெற்றிருப்பது அவசியமான ஒன்று. அப்போதுதான் மைசூர் சாண்டல் சோப் உலகம் முழுவதும் சென்று சேரும். தேசிய அளவில் அடுத்தக் கட்டத்தை எட்டுவதற்காக நடிகை தமன்னா விளம்பரத் தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
90% ஊழியர்கள்
நமது இலக்கை கணக்கிட்டு, அவரின் மார்க்கெட் மற்றும் ரசிகர்களின் கவனத்தை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா சோர் மற்றும் டிடர்ஜெண்ட்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களில் 90 சதவிகிதம் பேர் கன்னட மக்கள் தான். அதன் மூலமாக கிடைக்கும் லாபம் முழுக்க கர்நாடகா மக்களின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
3 முன்னணி நடிகைகள்
நமது மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்பதற்காக எப்போதும் இருப்போம். ஆனால் நமது பொருட்களை வியாபாரம் செய்வதற்கு தேசிய அளவில் ஒரு முகம் தேவை. கர்நாடகாவைச் சேர்ந்த நடிகைகளான ராஷ்மிகா மந்தனா, தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் வேறு நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால், அவர்களை எங்களால் ஒப்பந்தம் செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
வருமானம் எவ்வளவு?
கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜெண்ட்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,800 கோடியாகும். அதில் 12 சதவிகிதம் மட்டுமே கர்நாடகாவில் இருந்து ஈட்டப்படுகிறது. மீதமுள்ள 88 சதவிகித வருமானம் மற்ற மாநிலங்களில் இருந்தே ஈட்டப்படுகிறது. இதன் காரணமாக தேசிய அளவில் பல்வேறு மொழி ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வரும் நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications